

சேலத்தில் தவெக தலைவர் விஜய் உடன் நிர்வாகிகள் ,தொண்டர்கள் பங்கு பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கூட்டத்தில் விஜய் காரசாரமாக உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் வேடிக்கை பார்க்க வந்த வெள்ளிப்பட்டறை தொழிலாளியான மகாராஷ்டிராவை சேர்ந்த சூரஜ் (37) என்பவர் திடீரென மயங்கி விழுந்தார்.
கூட்டத்தில் செய்யப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருந்த மருத்துவ குழுவின் முதலுதவிகள் தரப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. விஜய் கூட்டம் என்றாலே கட்டுக்குள் அடங்காத ரசிகர்களால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து விடுமோ எனும் பதட்டம் எழுவது இயல்பாகி விட்டது.
காரணம் கரூரில் நடந்த கூட்டத்தில் நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 41 பேர் பலியான சம்பவம். மனதை வருத்தும் இந்த நிகழ்வு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது யார் காரணம் என்ற விபரங்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டு தற்போது இதன் மீதான வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணையில் உள்ளது.
சுராஜின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவரது குடும்பத்திற்கு நிதியுதவியாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்றும், அவரது குழந்தைகளின் எதிர்காலக் கல்விச் செலவு முழுவதையும் தமிழக வெற்றிக் கழகமே ஏற்கும் என்றும் தவெகவினர் உறுதி அளித்துள்ளனர். மேலும் இறந்த சூரஜ் உடலை சொந்த ஊரான மகாராஷ்டிரா வுக்கு எடுத்துச் செல்ல ஆகும் செலவுகளை தவெக ஏற்பதாகவும் கூறினர்.
முதலில் சுராஜின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் மறுப்புத் தெரிவித்து வந்ததும் , காவல்துறையினர் 'இயற்கைக்கு மாறான மரணம்' என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையிலும் தவெக சார்பில் அளிக்கப்பட்ட இந்த உறுதிமொழிகள் அடிப்படையில், காவல்துறையின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு சுராஜின் உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சுராஜ் மரணம் குறித்து பலரும் பல்வேறு விதங்களில் பேசி வரும் நிலையில் காவல் துறையினர் அவர் முன்பு இதய சம்பந்தமான சிகிச்சை எடுத்திருந்தார் போல உள்ளது என்றும் இதனால் பலவீனமான உடல் நிலை வெயிலின் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் என்றும் கூறுகின்றனர்.
2 குழந்தைகளின் கல்விச் செலவுடன் ரூபாய் 5 லட்சம் உதவித்தொகை மற்றும் சூரஜ் உடலை சொந்த ஊரான மகாராஷ்டிரா வுக்கு எடுத்துச் செல்ல ஆகும் செலவுகளை தவெக ஏற்பதாக கட்சி சார்பில் இந்த முறை துரிதமாக அறிவிக்கப்பட்டுள்ளது மனிதம் மிக்க செயல் என்றாலும் உயிரின் மதிப்பு வெறும் 5 லட்சம் தானா என சிந்திக்கவும் வைக்கிறது.
"உடல் நலன் குன்றியவர்கள் கூட்டத்திற்கு வரவேண்டாம் என தவெக நிர்வாகிகள் உறுதியுடன் கூறினாலும் அதைக் கேட்காமல் விஜயைப் பார்க்க 3 மணி நேரம் வெயிலில் காய்ந்து உயிர் விட்ட சுராஜ் போன்றவர்களை நினைத்தால் கோபம்தான் வருகிறது. " என்பதும் பொதுமக்களில் ஒரு சாராரின் கருத்தாக உள்ளது.
அதிக நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்லும் போது அதிக கவனம் தேவை. இல்லை எனில் தற்போது உள்ள நேரலை வசதிகளுடன் வீட்டில் இருந்த படியே இது போன்ற கூட்டங்களைப் பார்ப்பது அனைவருக்கும் நல்லது. ஏனெனில் கட்சிகளுக்கு நீங்கள் ஒரு தொண்டர் மட்டுமே. ஆனால் உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் மட்டுமே ஆதாரம் .