

அத்தை, மாமா, பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள் (First cousins) பிள்ளைகளுக்கு இடையிலான மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு இடையிலான திருமணங்களை ஸ்வீடன் நாடு தடை செய்துள்ளது. இச்சட்டம் ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது.
அத்தை, மாமா பிள்ளைகள் மற்றும் பிற நெருங்கிய உறவினர்களுக்கு இடையிலான திருமணங்களைத் தடை செய்ய ஸ்வீடனின் நாடாளுமன்றம் ஒருமனதாக வாக்களித்த நிலையில்,இந்த புதிய சட்டம் அத்தை/மாமா பிள்ளைகளுக்கு இடையிலான திருமணங்களுக்கு நிபந்தனையற்ற தடையை விதிக்கிறது; மேலும், வெளிநாடுகளில் நடைபெறும் இத்தகைய திருமணங்கள் ஸ்வீடனில் பொதுவாக அங்கீகரிக்கப்படாது.
இரத்த உறவுகளுக்கு (உறவு முறைத் திருமணம்) இடையே நடக்கும் திருமணங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ள சட்டத்தின் நோக்கங்களாக கௌரவக் கொலைகள், கட்டாயத் திருமணங்கள், குடும்ப அழுத்தங்களைத் தடுத்தல் மற்றும் மரபணுக் குறைபாடுகளைத் தவிர்ப்பது ஆகியவை சொல்லப்படுகிறது.
மேலும் ஒருவர் மற்றொருவரின் உடன்பிறந்தவர்களின் நேரடி வம்சாவளி உறவினராக இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்துகொள்ள முடியாது; அதேபோல, அரை-உடன்பிறப்புகள் (half-siblings) மற்றும் தத்தெடுக்கப்பட்ட உடன்பிறப்புகளுக்கு இடையிலான திருமணங்களும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதன் சட்டத்தின் அடிப்படையில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இத்தகைய திருமணம் செய்தவர்கள் ஸ்வீடன் குடியுரிமை அல்லது விசா பெற முயன்றால் அந்த திருமணத்தை ஸ்வீடன் அரசு அங்கீகரிக்காது என்பதுடன் இந்தத் தடையானது ஜூலை 1, 2026-க்குப் பிறகு நடக்கும் திருமணங்களுக்கே பொருந்தும். என்றும் அதற்கு முன்னர் ஸ்வீடனில் செய்யப்பட்ட திருமணங்கள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமணங்களில் எழும் குடும்பக் கட்டாயங்கள் மற்றும் பிறப்புக் குறைபாடுகளைத் தடுக்கவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவிலும் ஆண்டாண்டு காலமாக சொந்தங்கள் விட்டுப் போகக் கூடாது என்று உறவு முறைத் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் சமீபத்தில் உறவுகளுக்கு இடையே திருமணம் செய்து பிறக்கும் குழந்தைகள் மரபணு குறைபாடுகளால் பாதிக்கப்படுவதாக மருத்துவ ரீதியாக நிரூபிக்கப் பட்டு வருவதால் தற்போது இது போன்ற திருமணங்களைப் பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர்.
அதேபோல் இந்திய திருமணங்களில் குடும்பங்களின் கட்டாயத்திற்காக பெண்ணோ அல்லது ஆணோ தங்களுக்கு பிடிக்காமலேயே உறவு முறையில் திருமணம் செய்து கொள்வது இன்னும் ஆங்காங்கே நடைபெற்று வரும் செயலாகவே உள்ளது . மேலும் இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையான உறவுகளுக்கு இடையே உள்ள பாசத்தை அடிப்படையாகக் கொண்டும் திருமணங்கள் நடைபெற்று வருகின்றது .
இப்போது பெருமளவு காதல் திருமணங்கள் அதிகரித்து விட்ட நிலையில் சொந்தங்களுக்கு இடையே ஆன திருமணங்கள் குறைந்துவிட்டாலும் எதிர்கால குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காகவும் குடும்ப உறவுகளின் மகிழ்ச்சிக்காகவும் ஸ்வீடன் நாட்டை போல் இந்தியாவிலும் இதுபோன்ற திருமணங்களுக்கு தடை வருமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.