

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வென்று கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. தவெக கட்சித் தலைவரும் தமிழகத்தின் முதல்வருமான விஜய் தேர்தலில் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், பெரம்பூரை தக்க வைத்துக்கண்டு திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் 91,381 வாக்குகள் பெற்று, விஜயை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் மற்றும் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜசேகரன் இருவரையும் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இந்நிலையில் வரும் திங்கட்கிழமை(ஜூன் 1ஆம் தேதி) திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக திருச்சி செல்கிறார். திருச்சி புனித வளனார் கல்லூரி வளாகத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி செல்லும் விஜய் அங்குள்ள கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். அந்த வகையில் திருச்சி கிழக்குடன் சேர்த்து பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம் ஆகிய 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் அங்கு செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.