ஏழைகளுக்கு முற்றிலும் இலவசம்!₹30 கோடியில் திறக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் ‘ஹோஸ்பிஸ்’ வளாகம்!

குணப்படுத்த முடியாத இறுதிக்கட்ட நோயாளிகளின் வலியைப் போக்கி, கண்ணியமான இறுதிப் பயணத்திற்குத் தாம்பரம் அரசு மருத்துவமனை வழிவகை செய்கிறது.
அரசு நல் ஆதரவு மையம்
அரசு நல் ஆதரவு மையம்
Updated on

“மருத்துவ உலகம் கைகளை கழுவிவிட்ட பிறகு, மனிதநேயம் கைகளைப் பற்றி கொள்ளும் இடமே ஹோஸ்பிஸ் (Hospice)” எனப்படுகிறது. நான்காம் கட்டப் புற்றுநோய் அல்லது குணப்படுத்த முடியாத இறுதிக்கட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு, மரணத்தின் வாசலில் நின்றுகொண்டிருப்பவர்களுக்கு இனி ஆயுளை நீட்டிக்க முடியாது என்பதுதான் கசப்பான எதார்த்தம். ஆனால், அவர்கள் வாழப் போகும் அந்த மீதமுள்ள சில நாட்களை, வலியும் வேதனையும் இல்லாமல், கண்ணியத்தோடும் நிம்மதியோடும் வாழ வைக்க முடியுமா? இந்த மனிதநேய கேள்விக்கு விடையாக தமிழக அரசின் சார்பில் சென்னை தாம்பரத்தில் உருவெடுத்துள்ளதுதான் தமிழ்நாட்டின் முதல் ‘அரசு நல் ஆதரவு மையம்’ (Hospice Care Centre).

பொதுவாக, பெரிய மருத்துவமனைகள் நோயைக் குணப்படுத்துவதை (Cure) மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுகின்றன. ஆனால், குணப்படுத்த முடியாத நிலைக்கு ஒரு நோயாளி செல்லும்போது, அங்கு மருத்துவமனை படுக்கைகளும், நவீனச் சிகிச்சைகளும் தங்களின் எல்லையை இழக்கின்றன. அதன் பிறகு அவர்களுக்குத் தேவைப்படுவது ‘வலி நிவாரணம் மற்றும் அரவணைப்பு’ (Palliative & End-of-life care) மட்டும்தான். இதற்காகவே, தாம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 30.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 180 அதிநவீன படுக்கை வசதிகளுடன் கூடிய பிரம்மாண்டமான தனி வளாகம் சென்னை மருத்துவ கல்லூரியுடன் (MMC) இணைக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் மட்டுமே ஒரு சில செல்வந்தர்களுக்கு கிடைத்து வந்த இந்த உன்னத சேவை, இன்று ஏழை எளிய சாமானிய மக்களுக்காக முற்றிலும் இலவசமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அரசு நல் ஆதரவு மையம்
அரசு நல் ஆதரவு மையம்

இந்த மையத்தின் பிரதான நோக்கம் நோயாளிகளின் உடலையும் மனதையும் வதைக்கும் ‘வலி’யை குறைப்பதுதான். இங்கு, புற்றுநோயின் இறுதிக்கட்டத்தில் ஏற்படும் நரக வேதனையை குறைக்க, பிரத்யேகப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மூலம் சர்வதேச தரம் வாய்ந்த வலி நிவாரண மருந்துகள் மற்றும் ஊசிகள் 24 மணி நேரமும் தடையின்றி வழங்கப்படுகின்றன. மேலும், படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகளை தூய்மைப்படுத்துவது, டயப்பர் மாற்றுவது, உணவளிப்பது என அனைத்து பணிகளையும் இங்கிருக்கும் அர்ப்பணிப்புமிக்க செவிலியர்கள் இன்முகத்தோடு செய்கிறார்கள். இது, நோயாளியை கவனித்துக் கொண்டு தங்களின் வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கும் ஏழை குடும்பங்களின் தோள் சுமையைப் பெருமளவு குறைக்கிறது. அதுமட்டுமின்றி, "நான் இறக்கப் போகிறேன்" என்ற மரண பயத்தில் இருக்கும் நோயாளிகளுக்கும், அவர்களைப் பிரிய போகும் குடும்பத்தினருக்கும் தியானம், யோகா மற்றும் மனநல ஆலோசகர்கள் மூலமாக அழுத்தமான கவுன்சிலிங் வழங்கப்பட்டு, அவர்களின் மன அமைதி உறுதி செய்யப்படுகிறது.

தற்போது 180 படுக்கைகளுடன், தீவிர சிகிச்சை பிரிவு (ICU) மற்றும் பொது வார்டுகளுடன் கூடிய இந்த தனித்துவமான பிரத்யேக மையம் சென்னையில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் சிறிய அளவிலான வார்டுகள் மூலமும், வீடுகளுக்கே சென்று செவிலியர்கள் பராமரிக்கும் திட்டத்தின் மூலமும் இச்சேவை ஓரளவுக்கு பரவலாக்கப்பட்டுள்ளது. எனினும், சென்னையை போன்றே மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி போன்ற பிற முக்கிய மண்டலங்களிலும் இத்தகைய பிரத்யேக சுயாதீன ‘ஹோஸ்பிஸ்’ மையங்களை அரசு போர்க்கால அடிப்படையில் உருவாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மருத்துவ கட்டணங்களை செலுத்த முடியாமல் ஏழைகள் நடுத்தெருவிற்கு வரும் இந்த சூழலில், தாம்பரம் நல் ஆதரவு மையம் போன்ற அரசுத் திட்டங்கள் சாமானியர்களின் வாழ்வில் ஒளிரும் பெருவிளக்குகள் ஆகும். பிறப்பு எப்படி ஒரு மனிதனுக்கு கொண்டாட்டமாக அமைய வேண்டுமோ, அதேபோல அவனது இறுதி பயணமும் வலியற்றதாக, நிம்மதியானதாக அமைய வேண்டும். அதை சாத்தியமாக்கியுள்ள இந்தத் தாம்பரம் மையம், தமிழக மருத்துவ வரலாற்றில் மனிதநேயத்தின் ஆகச்சிறந்த முத்திரையாக என்றென்றும் திகழும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இதையும் படியுங்கள்:
எந்த பகையும் இல்லாம எரிச்சலூட்டும் உறவுகளை கட் செய்வது எப்படி... சூப்பர் ரகசியம் இதோ!
அரசு நல் ஆதரவு மையம்
logo
Kalki Online
kalkionline.com