பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை சேர்ப்பதற்கு சென்னை மாநகராட்சி கால அவகாசம் நீட்டிப்பு செய்துள்ளது.
பிறப்புச் சான்றிதழ் என்பது குழந்தையின் சட்ட பூர்வ குடியுரிமைக்கான சான்றாகும். பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான பிறப்பு சான்றிதழாகும். குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற வேண்டும். அதுவே குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்தக் குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதி மொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் கொடுத்து எந்தவித கட்டணமும் இன்றி பெயரை பதிவு செய்திடலாம்.
12 மாதங்களுக்குள் பெயர் பதிவு செய்து பிறப்பு சான்றிதழ் பெறாதவர்கள் தங்கள் பிள்ளைகளின் பெயரை 15 ஆண்டுகளுக்குள் உரிய கால தாமத கட்டணம் ரூபாய் 200 செலுத்தி பதிவு செய்திட பிறப்பு இறப்பு பதிவு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அப்படியும் பிறப்பு பதிவு செய்து 15 ஆண்டு கால அளவு முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் உள்ள அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் பெயர் பதிவு செய்திட 26/9/2026 வரை தமிழ்நாடு அரசினால் கால் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் இருந்தால் பிறப்புச் சான்றிதழ் நகல், பள்ளி கல்லூரி சான்றிதழ், ஆதார் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் பெருநகர சென்னை மாநகராட்சி பிறப்பு இறப்பு பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக பிறப்பு பதிவு செய்யப்பட்டதில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் பல காரணங்களால் பலரும் தங்கள் குழந்தைகளின் பெயரை சான்றிதழில் பதிவு செய்யாமல் உள்ளனர். இவர்களின் நலன் கருதி தற்பொழுது பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை சேர்க்க சென்னை மாநகராட்சி கால அவகாசம் நீட்டிப்பு செய்துள்ளது. எனவே இதுவரை பெயர் பதிவு செய்யாத பெற்றோர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய குழந்தைகளின் பெயரை பிறப்புச் சான்றிதழில் உடனடியாக சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.