வேளாண் துறைக்கும் வெள்ளை அறிக்கை - அமைச்சர் ஆர்.வினோத் அறிவிப்பு..!

வேளாண் துறை வெள்ளை அறிக்கை
வேளாண் துறை வெள்ளை அறிக்கைSource:dinamani
Updated on

வேளாண் துறையிலும் தமிழக முதல்வர் வெள்ளை அறிக்கையை வெளியிடுவார் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர்.வினோத் கூறியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த பின் இதை தெரிவித்தார்.

முதல்வர் ஒவ்வொரு துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வேளாண் துறையிலும் நடந்த முறைகேடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்றவர், எல் நினோ காரணமாக டெல்டா மண்டலத்துக்கு பாதிப்பு இல்லையென்றாலும் அதுபோன்ற காலகட்டத்தில் சாகுபடி செய்யும் முறைகளை ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார். அத்துடன் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிப்பதற்கான வழிமுறைகளை முதல்வர் ஆராய்ந்து வருகிறார் என்றவர், கும்பகோணம் தொகுதி மக்கள் தன்னை 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

நிதி மற்றும் மின்சாரத் துறைகளைத் தொடர்ந்து, தவெக அரசு தமிழக வேளாண்மை-உழவர் நலத்துறைக்கும் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளது. கடந்த 5 ஆண்டுகளின் நிதி நிலை, செலவினங்கள் மற்றும் வேளாண் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த விவரங்கள் இதில் இடம்பெற உள்ளன.

Government of tamil nadu
Government of tamil nadu

வேளாண்துறை அமைச்சர் ஆர்.வினோத் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது இதை உறுதிப்படுத்தினார். கடந்த கால திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட நிதி, வேளாண் துறை சார்ந்த புதிய திட்டங்களுக்கான ஆய்வு மற்றும் விவசாயிகளின் நிலை ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. புதிய அரசு பொறுப்பேற்ற 40 நாட்களுக்குள் ரூ. 6,000 கோடி அளவிற்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் விவசாய தற்போதைய நிலை,கடந்த சில ஆண்டுகளில் வேளாண் துறையில் ஏற்பட்டுள்ள கடன் சுமைகள், விவசாயிகளுக்கான திட்டங்கள், நீர் மேலாண்மை மற்றும் இத்துறையின் நிதி ஒதுக்கீடு எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது போன்ற முக்கிய விவரங்கள் இந்த வெள்ளை அறிக்கையில் விரிவாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய துறைகளின் வெள்ளை அறிக்கைகள் பெரும் அரசியல் விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், வேளாண் துறையின் அறிக்கை மீதும் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

மனித குலத்தின் அடிப்படைத் தேவையான உணவு, உடை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை வழங்குவதிலும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் வேளாண்மை முதன்மையானது. இது உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் துறையாகவும் விளங்குகிறது. அப்படிப்பட்ட வேளாண் துறையில் அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் நலத்திட்டங்களை இலக்காகக் கொண்டு பல நேரங்களில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. நிதி முறைகேடுகள், மானிய ஊழல்கள், பயிர் காப்பீட்டு மோசடி, உர மானிய முறைகேடுகள், போலி பயனாளிகள் சேர்க்கை, விவசாய கடன் தள்ளுபடி ஊழல், உள்ளீட்டு பொருட்கள் மற்றும் விதை மோசடிகள், நேரடி நெல் கொள்முதல் குளறுபடிகள் போன்ற பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக விவசாயிகளால் புகார்கள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், துறையின் செயல்பாடுகளில் முழுமையான வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்கும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. அத்துடன் இத்திட்டம் விரைவில் மக்கள் பார்வைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கருப்பு பணமும் நிழல் உலகமும் எனக்கு வேண்டாம்.! பாலிவுட் பக்கமே போகாததற்கு கமல் சொன்ன காரணம்!
வேளாண் துறை வெள்ளை அறிக்கை
logo
Kalki Online
kalkionline.com