சில வழங்குகளில் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் மக்கள் நலன் சார்ந்தவையாகவும் இருக்கும். இந்த தீர்ப்புகள் இந்தியாவின் நீதித்துறை அமைப்பின் வலிமையையும், இயற்கை நீதி (Natural Justice) கொள்கைகளையும் நிலைநிறுத்துகின்றன. அப்படிப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
மருத்துவக் காரணங்களுக்காக அரசுப் பணியை ராஜினாமா செய்யும் ஊழியர்கள் ஓய்வூதியப் பலன்களைப் பெற தகுதியற்றவர்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அதிரடியான தீர்ப்பை வழங்கி உள்ளது.
மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்த இரண்டு அரசு ஊழியர்கள், தங்களை விருப்ப ஓய்வு பெற்றவர்களாகக் கருதி, ஓய்வூதியம் வழங்க, அரசுக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
அரசு ஊழியர்கள் உரிய மருத்துவ காரணங்களுடனோ அல்லது அரசு நிர்ணயித்த குறிப்பிட்ட காலங்கள் பணியாற்றி விட்டு சொந்த விருப்பத்தின்படி ஓய்வு பெற்றாலோ ஓய்வூதியம் வழங்கப்படும் வகையில் தற்போது விதிகள் நடைமுறையில் உள்ளன.
இந்நிலையில் பணியை ராஜினாமா செய்த அரசு ஊழியர், ஓய்வூதியம் பெற தகுதி உள்ளதா, இல்லையா என்பது தொடர்பாக வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், இரு வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
அதாவது, அரசு ஊழிர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கலாம் என்று ஐகோர்ட்டு 2 நீதிபதிகள் கொண்ட ஒரு டிவிசன் பெஞ்சும், ராஜினாமா செய்தால், சட்டப்படி ஓய்வூதியம் வழங்க தேவையில்லை என்று மற்றொரு டிவிசன் பெஞ்சும் மாறுபட்ட இருவேறு தீர்ப்புகளை பிறப்பித்த நிலையில் எந்த தீர்ப்பை எடுத்து கொள்வது என்ற குழப்பம் எழுந்தது. இதனால் தனி நீதிபதி முன்பு இதுபோன்ற வழங்குகள் விசாரணைக்கு வரும் போது ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலை ஏறப்பட்டது.
இந்த இருவிதமான தீர்ப்புகளில் எந்த தீர்ப்பு சரியானது என்று முடிவுக்கு வரமுடியாத சூழ்நிலையில், இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், டி.பரத சக்கரவர்த்தி மற்றும் சி.குமரப்பன் அடங்கிய, மூன்று நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த புதிய உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள், 1978-இன் கீழ் மருத்துவ அல்லது உடல்நலக் காரணங்களுக்காகக் கூட, அரசுப் பணி அல்லது பதவியில் இருந்து 'ராஜினாமா' செய்வது என்பது முந்தைய பணிக்காலத்தை இழக்க நேரிடும். ராஜினாமா கோரப்படும் காரணங்கள் முக்கியமற்றவை; ராஜினாமா என்பது முந்தைய பணிக்காலத்தை இழப்பது என்பதை மட்டுமே குறிக்கும் என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
இதற்கு முன்பு உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, 'ராஜினாமா' மற்றும் 'தன்னார்வ ஓய்வு' ஆகியவற்றுக்கு இடையே ஒரு 'சரியான வேறுபாடு' உள்ளது என்றும் அந்த அமர்வு கூறியது.
மேலும், பணியில் இருந்து விலகுவது என்பது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளைக் கொண்ட ஒரு சேவை நிபந்தனை என்று குறிப்பிட்ட நீதிபதிகள் அமர்வு, பணியில் இருந்து விலகுவதால் ஏற்படும் விளைவுகளை ஏற்றுக்கொண்ட பிறகு, ஊழியர்கள் மருத்துவக் காரணங்களைக் கூறி ஓய்வூதியப் பலன்களைக் கோர முடியாது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தமிழகஅரசு பணியாளர்களுக்கான ஓய்வூதிய விதிகள், உடல் அல்லது மன அளவில் பலவீனம் போன்ற மருத்துவ காரணங்கள் அடிப்படையில், ராஜினாமா செய்வோருக்கு மட்டுமே,ஓய்வூதியம் வழங்க வகை செய்கிறது.மற்ற மருத்துவ காரணங்களை கூறி ராஜினாமா செய்தவர், முந்தைய பணிக் காலத்தை இழந்து விடுவதால், ஓய்வூதியம் உள்ளிட்ட பண பலன்களை பெற அவருக்கு தகுதியில்லை என்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், டி.பரத சக்கரவர்த்தி மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்துள்ளனர்.