

வீடுகளில் முதியோர்கள் இறந்தால், அதற்கு காரணமாக வயது மூப்பு என பதிவிடக்கூடாது என்றும், இறப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து பதிவு செய்வது அவசியம் என்றும் தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
பொதுவாக மருத்துவமனைகளில் நிகழும் இறப்புகளுக்குக் காரணங்கள் முறையாகப் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், வீடுகளில் நடக்கும் இறப்புகளுக்குப் போதிய மருத்துவக் காரணங்கள் பதிவு செய்யப்படுவதில்லை என்ற குறையைப் போக்க இந்தத் திட்டம் கொண்டுவரப்படுகிறது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 6.96 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. அதில், 23% மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போதும், 73% வீடுகளிலும் 4% எதிர்பாராத விபத்துகள் காரணமாக நடக்கிறது. அந்த வகையில் மருத்துவமனைகளில் ஏற்படும் மரணங்களை விட வீடுகளில் நிகழும் மரணங்கள் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், வீடுகளில் நிகழும் அதிகளவிலான இறப்புகளுக்குப் பின்னால் உள்ள நோய்கள் மற்றும் காரணங்களைக் கண்டறிந்து, அதன் மூலம் அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை தடுப்புப் பணிகள் செய்யும் ஆய்வை தமிழக பொது சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
முதல்கட்டமாக, உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆகியவற்றுடன் இணைந்து கரூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 2023-ம் ஆண்டுகளில் இறந்தவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டன. அதில், எவ்வித காரணமும் இன்றி, வயது மூப்பு காரணமாக இறந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி, இறந்தவர்களின் வீடுகளுக்கு சென்று, இறப்புக்கான நோய் உள்ளிட்ட காரணங்கள் பதிவு செய்யப்படுகிறது. அதில், 98% இறப்புக்கான காரணம் கண்டறிந்ததில், 20% வரை இதய நோயாலும், 7% நீரிழிவு நோய் போன்றவற்றாலும் இறப்புகள் நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
கரூர், கிருஷ்ணகிரியைத் தொடர்ந்து தற்போது பெரம்பலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இந்த ஆய்வு விரிவுபடுத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்படவுள்ளது.
வரும் காலங்களில் வீடுகளில் இறந்தாலும், இறப்புக்கான காரணத்தை மருத்துவர் மூலமாக உறுதி செய்து சான்றிதழ் வழங்குவது கட்டாயமாக்கப்படும் என்றும் இறந்தவர்களின் இறப்புகளை முறையாக பதிவு செய்யுமாறு அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புள்ளி விபரங்கள் மூலம் ஒரு பகுதியில் அதிகப்படியாக இறப்புக்கான காரணத்தை கண்டறிந்து, அதன் அடிப்படையில், அந்தப் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கைகளைச் சுகாதாரத்துறை தீவிரப்படுத்துவதன் மூலம் வரும் காலங்களில் தவிர்க்கக்கூடிய மரணங்களைக் குறைக்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டத்தின்படி, வீடுகளில் இறந்தவர்களின் காரணத்தைக் கண்டறிய சுகாதாரத் துறை வெர்பல் ஆட்டோப்சி எனும் முறையைப் பயன்படுத்துகிறது. இதில் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் இறந்தவரின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தாரிடம் இறப்பதற்கு முன் அவருக்கு இருந்த அறிகுறிகள், குறித்துக் கேட்டுப் பதிவு செய்து இந்தத் தகவல்கள் ஒரு மென்பொருள் அல்லது மருத்துவர் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, இறுதியில் மரணத்திற்கான காரணம் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை போன்ற நகர பகுதிகளில் வீடுகளில் இயற்கை மரணத்தால் இறக்கும் முதியோர்களின் உடல்களை, மயான பூமியில் தகனம் மற்றும் அடக்கம் செய்வதற்கு, டாக்டர் உறுதி சான்றிதழ் கட்டாயம் என்பதால், வீடுகளில் யாராவது இறக்கும் பட்சத்திர் டாக்டர் உறுதி சான்றிதழ் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த சூழ்நிலையில் மாநிலம் முழுவதும் இதை கட்டாயமாக்கினால் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இல்லாத கிராம மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.