

வைகாசி மாத வெள்ளிக்கிழமை சுபமுகூர்த்த தினமான இன்று (மே 29-ம்தேதி) பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மற்ற நாட்களை விட குறிப்பாக சுபமுகூர்த்த நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும். ஏனெனில் நல்ல நாட்களில், நிலம், வீடு போன்ற தங்களின் சொத்துகளுக்கு பத்திரப் பதிவு செய்ய மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவார்கள்.
தமிழகத்தில் 589 சார்பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பத்திரப்பதிவு பணிகள் நடக்கின்றன. இதில் தினமும் சராசரியாக 15,000 பத்திரங்கள் வரை பதிவு செய்யப்படுகின்றன. இதுவே சுபமுகூர்த்த நாட்களில் இன்னும் அதிகமாக பத்திரப்பதிவு நடைபெறும். இதன் வாயிலாக அரசுக்கு தினசரி 150 முதல் 200 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
எனவே, அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் பதிவுத்துறை தரப்பில் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நடப்பு வைகாசி மாதத்தில் இன்று (மே 29-ம்தேதி) சுபமுகூர்த்த தினமாகும். அதுவும் சுபமுகூர்த்த நாள் மட்டுமின்றி வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வருவதால் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டதாக பதிவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, சுபமுகூர்த்த தினமான இன்று (வெள்ளிக்கிழமை - மே 29-ம்தேதி) ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கப்படும் என பதிவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் என 16 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட பதிவுத்துறை உத்தரவிடப்பட்டது.