

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்ததும் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது அரசு. அதில் ஒன்றுதான் பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றின் அருகில் இருக்கும் மதுபான கடைகளை அகற்றும் உத்தரவு.
டாஸ்மாக் கடைகளில் மது அருந்துபவர்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அந்தந்த பகுதிகளில் இருக்கும் கடைகளை வேறு இடத்திற்கு அகற்ற பொதுமக்கள் பல வருடங்களாக போராட்டம் மற்றும் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் பதவியேற்றதும் தமிழக முதல்வர் அளித்த முதல் உத்தரவின்படி கோவில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு 500 மீட்டர் சுற்றளவில் இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்ட மொத்த கணக்குப்படி கோயில்கள் அருகில் 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகில், 255 கடைகள் என மொத்தம் 717 கடைகள் மூடப்படும் அல்லது வேறு இடம் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் துவரங்குறிச்சி, மணப்பாறை, துறையூர், தொட்டியம், ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு பகுதிகளில் இருந்த கடைகள் மூடப்பட்டதாகவும் மொத்தம் 16 கடைகள் அடையாளம் காணப்பட்டதில், முதற்கட்டமாக 10 கடைகள் மூடப்பட்டதாகவும் தெரிகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 43 டாஸ்மாக் கடைகள் தொடர்பாக ஊழியர் போராட்டம் மற்றும் சில கடைகள் மூடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சில டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டதாக தகவல்கள் உள்ளன.
ஒரு புறம் இந்த நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த உத்தரவினால் அந்தந்த கடைகளில் பணியாற்றி வரும் சுமார் 3000 பணியாளர்கள் நிலை என்ன என்ற கேள்வியும் எழுந்தது. தற்போது அதற்கு தீர்வு காணும் விதமாக வந்துள்ளது இந்த அறிவிப்பு.
தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களை, பணி மூப்பு அடிப்படையில் மற்ற கடைகளுக்கும், கிடங்குகளுக்கும் இடமாற்றம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.