தமிழக மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியுடனே கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த்

தமிழக  மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியுடனே கூட்டணி -  பிரேமலதா விஜயகாந்த்

“தமிழகத்தின் மீதும், தமிழக மக்களின் நலனிலும், சமூக அக்கறையுடனும் எந்தக் கட்சி செயல்படுகிறதோ அந்தக் கட்சியுடன்தான் தே.மு.தி.க. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கும்” என்று தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தே.மு.தி.க. கட்சியின்சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபின் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்தார் பிரேமலதா விஜயகாந்த்.

அப்போது அவர் பேசியதாவது....

சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வெற்றிப்பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக சாத்தியமே இல்லாத ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தது. அதை நம்பி மக்களும் தி.மு.க.வை ஆட்சியில் அமர வைத்தார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி வழங்கினார்கள். தற்போது ஆட்சியைக் கைப்பற்றியதும் நீட் தேர்வு உள்ளிட்ட எந்த பிரச்னைகளையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது திமுக அரசு. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?

அதிமுக ஆட்சியில் தைப்பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 கொடுத்த போது ஸ்டாலின் ரூபாய் 5000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தற்போது ஆட்சிக்கு வந்துவிட்ட ஸ்டாலின் பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கும், ஏன்... பெண் போலீசுக்கும் கூட பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் 70 பட்டாசு ஆலைகள் கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இந்த ஆலைகளை உடனடியாக திறக்க வேண்டும். இல்லாவிட்டால் தே.மு.தி.க. சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

செவிலியர்கள் பிரச்னை, இடைநிலை ஆசிரியர்கள் பிரச்னை என பல பிரச்னைகள் தமிழகத்தில் உள்ளது. தொழிலாளர்களையும், விவசாயிகளையும் திமுக அரசு புறக்கணிப்பு வருகிறது.

இந்நிலை இப்படியே நீடித்தால் திமுக அரசு மிகப் பெரிய பிரச்னையைசந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

தமிழக ஆளுநரின் ‘தமிழகம், தமிழ்நாடு’ என்பது குறித்த கருத்து கண்டனத்திற்குரியது. ஆளுநருக்கு என்று நாட்டில் எவ்வளவோ வேலைகள் இருக்கும்போது அதை விட்டுவிட்டு இப்படி பேசுவது அவரது பதவிக்கு இது வேண்டாத வேலை.

தமிழகத்தில் உள்ளாட்சிப் பணிகளில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை. ஆனால் தமிழகத்தில் லஞ்சம் ஊழல் பெருகிவிட்டது. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, மது விற்பனை என பல வழிகளில் அரசுக்கு வருவாய் வருகிறது. ஆனால் அந்த பணம் எங்கே செல்கிறது.

2024ல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் யாருடன் கூட்டணி வைப்பது என்று இன்னும் முடிவு எடுக்கவில்லை. கூட்டணி குறித்து கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டி ஆலோசனை செய்து கூட்டணி குறித்த முடிவினை கட்சித் தலைவர் அறிவிப்பார்.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com