‘வேட்டிய மடிச்சுக் கட்டினா நாங்களும்…’ அன்புமணி ஆவேசம்!

‘வேட்டிய மடிச்சுக் கட்டினா நாங்களும்…’ அன்புமணி ஆவேசம்!

டலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக, ‘நீர், நிலம், விவசாயம் காப்போம்’ பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாமக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசும்போது, “ என்எல்சி நிறுவனம் அதன் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு முடிவு செய்திருப்பது விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் வெகுவாக பாதிக்கும் என்பதால், அந்நிறுவனத்துக்கு எதிரா பாமக போராட்டம் நடத்துகிறது. இந்த நிலங்கள் அனைத்தும் முப்போகம் விளையக் கூடியவையாகும். அதுமட்டுமின்றி, வருடத்துக்கு பத்து லட்சம் ரூபாய் வரை வருமானத்தை ஈட்டித் தரக்கூடியவை. அதனால் இந்த நிலங்களை விவசாயிகள் எப்படி விட்டுத் தருவார்கள்?

சென்ற வாரம் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் என்எல்சி நிறுவனத்துக்கு பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது விளை நிலங்களை வழங்கியதாகவும், அப்படி நிலத்தை வழங்கியவர்களில் பத்து பேருக்கு அந்த நிறுவனத்தின் பணி நியமன ஆணையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ‘உழவுத் தொழிலாளர்களின் நலனுக்காகப் பாடுபடுவேன்’ என்று உறுதியேற்றுக்கொண்ட அமைச்சர் பன்னீர்செல்வம் தற்போது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பதிலாக அவர்களின் விவசாய நிலங்களைப் பறிக்கும் செயலில் ஈடுபடுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும்.

பொதுத்துறை நிறுவனங்களைத் தொடர்ந்து தனியாருக்கு விற்று வரும் மத்திய அரசின் பணமாக்குதல் திட்டத்தின் கீழ் என்எல்சி நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனியாருக்கு விற்பனை செய்யப்பட இருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் என்எல்சி நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என்று தெரிந்தே அதற்கு விவசாயிகளின் விளை நிலங்களை அவர்களிடம் இருந்து பறித்துத் தருவது எந்த வகையிலும் நியாயம் கிடையாது. இந்தப் பிரச்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு விவசாயிகளுக்கு நல்லதொரு தீர்வினை பெற்றுத் தரவேண்டும்” என்று அன்புமணி பேசினார்.

முன்னதாக அவர், “அன்புமணி என்றால் டீசண்ட் என்று அனைவரும் நினைச்சுட்டு இருக்காங்க. வேட்டிய மடிச்சுக் கட்டினா நாங்களும்….” என்று ஆவேசமாகப் பேசினார். அன்புமணி ராமதாஸின் இந்த பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வளைதளங்களில் மிகப்பெரும் அளவில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com