எடப்பாடிக்கு வந்த சிக்கல்... தவிடுபொடியாகும் 2024 பிளான்!

 எடப்பாடிக்கு வந்த சிக்கல்... தவிடுபொடியாகும் 2024 பிளான்!

2024 மக்களவை தேர்தல் மோடிக்கு மட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமிக்கும் முக்கியமான தேர்தல். தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி உள்ளார். இரட்டை தலைமை, ஒற்றை நாற்காலி, நீதிமன்ற வழக்குகள், தேர்தல் ஆணைய அங்கீகாரம் என ஈபிஎஸ் – ஓபிஎஸ் இரு தரப்பிற்கும் இடையே அனல் பறக்கும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது.

 
கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசல், ஆட்களை தன் பக்கம் இழுக்கும் சூழ்ச்சிகளுக்கு மத்தியில் 2024 தேர்தலை எடப்பாடி பழனிசாமி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக முன்வந்து நிற்கிறது.

இந்த சூழலில்  கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் விலைவாசி உயர்வை கண்டித்தும், திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்தும்  நடந்த ஆர்ப்பாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.      

ஆர்பாட்ட கூட்டத்தில்  வேலுமணி பேசும்போது, மக்களை வதைக்கும் கடுமையான விலைவாசி உயர்வு, நிறைவேற்றாத திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவற்றை சுட்டிக் காட்டி கடுமையாக பேசினார்.

மேலும் பேசுகையில், வரும் மக்களவை தேர்தலில் எடப்பாடி தலைமையில் அனைத்து தொகுதிகளிலும் வென்று காட்டுவோம். வேலுமணி எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான நபர். கிட்டதட்ட வலது கை போன்று செயல்படக் கூடியவர்.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் கோவை மட்டுமின்றி கிட்டதட்ட ஒட்டுமொத்த தமிழகமும் திமுக வசம் சென்றுவிட்டது. இதை மீட்டெடுக்க வேலுமணி போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களின் செயல்பாடுகள் மிகவும் அவசியம்.

எடப்பாடி போட்டு கொடுக்கும்  வியூகங்களை அப்படியே கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல்  செய்து காட்டக் கூடியவர் எஸ்.பி.வேலுமணி. வரும் 2024 மக்களவை தேர்தலில் கோவையில் எப்படியாவது வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமிக்கு அதை சமர்பிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.


யார் தலைமையில் தேர்தலில் அதிமுக போட்டியிடும்? கூட்டணி கட்சிகளின் நிலை என்ன? யாருடன் கூட்டணி வைப்பார்கள்? என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. உதாரணமாக கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை கட்சிகள் யாரிடம் தொடங்கும். எடப்பாடி பழனிசாமியா? ஓ.பன்னீர்செல்வமா? கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.

ஆனால் அதிமுகவில் நடந்து கொண்டிருக்கும் ஒற்றை தலைமைக்கான போராட்டம் எந்த அளவிற்கு தேர்தலில் வெற்றியை பாதிக்கும் அல்லது வெற்றியை பெற்று தரும் என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.


இதற்கு வலு சேர்க்கும் வகையில் மத்திய அரசு, இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவை எழுதிய கடிதங்கள் அமைந்தன. கடைசியாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் இருந்து வந்த கடிதம் பெரிய ட்விஸ்டாக அமைந்துவிட்டது. அதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு சாதகமாக மாறியுள்ளது.


இதனால் அதிமுகவின் ஒற்றை தலைமைக்கான சர்ச்சை மீண்டும் அனல் பறக்க தொடங்கியுள்ளது. இந்த விஷயத்தில் தொண்டர்களுக்கும் மற்ற கட்சிக்கும் முதலில் தெளிவான ஒரு முடிவு தெரிய வேண்டும். இதுதான் அதிமுக தலைமைக்கு இப்போதைய முக்கிய கடமை.

அப்படிச் செய்தால்தான் 2024 மக்களவை தேர்தலுக்காக தலைமையும் தொண்டர்களும் செய்யும் வேலைகள் முழுமையான பயனைத் தரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com