

தமிழக சட்டப்பேரவை இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. மாற்றுத்திறனாளிகள் நலம், மதுவிலக்கு, சமூக நலன், வேளாண்மைத் துறை, மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றன. தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 5ஆம் தேதி அன்று தொடங்கியது. அன்றைய தினம் 2026- 27 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 7ஆம் தேதி மற்றும் 10, 11 ஆகிய தேதிகளில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன. 12ஆம் தேதி பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதில் அளித்தனர். தொடர்ந்து 17-ஆம் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இறுதியாக 28-ம் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. 29ஆம் தேதி சனிக்கிழமை, 30ஆம் தேதி என இரண்டு நாட்கள் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டது. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவை கூடியது.
இன்று தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்ந்த 6 முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டுள்ளார். அதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது. இவை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களில் 23 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வரும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று கூறினார்.
டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் எம்ஆர்பி விதிமீறல்கள் உள்ளிட்ட முறைகேடுகளை தடுப்பதற்கும், ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறினார்.
அதன்படி மேற்பார்வையாளர்களுக்கு 33,023 ரூபாய், விற்பனையாளர்களுக்கு ரூபாய் 30,284, உதவி விற்பனையாளர்களுக்கு 28,689 ரூபாய் என ஊதியம் உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூபாய் 20,000 வழங்கப்படும்.
ஆண்டுதோறும் மூன்று சீருடைகளுக்கான துணி மற்றும் தையல் செலவாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
அத்துடன் டாஸ்மாக் நிறுவனத்தில் பணி புரியும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் 8 மணி நேர பணி ஒதுக்கீடு, மாதத்திற்கு ஒரு நாள் விடுமுறை, மாதத்தில் இரண்டு நாள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் ஊழியர்கள் முதலில் இடைநீக்கமும், மீண்டும் தவறு செய்தால் நிரந்தரமாக பணி நீக்கமும் செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
கள்ளச்சாராயம் விற்று, மனம் திருந்தியவருக்கான மறுவாழ்வு நிதி ரூபாய் 50,000-லிருந்து 1 லட்சம் ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார்.
பணியாளர்களில் தகுதியுடைய 250 பணியாளர்களை சிறப்பு தேர்வு மூலம் இளநிலை உதவியாளராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சில்லறைக் கடைகளில் தூய்மைப் பணி மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய மாநகரக் கடைகளுக்கு 5,000 ரூபாயும், நகராட்சி பேரூராட்சி கடைகளுக்கு 4,000, கிராமப்புறக் கடைகளுக்கு 3,000 சில்லறை செலவினங்கள் மேற்கொள்ள வழங்கப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.