துபாய் என்றாலே ஆடம்பரம், செல்வம், பிரம்மாண்டம் ஆகியவைதான் நினைவுக்கு வரும். அங்குள்ள அரச குடும்பத்தினர் உலகின் பணக்காரர்களில் ஒருவராக அறியப்படுகிறார்கள். இந்த இளவரசர்கள் குறித்து பல சுவாரசியமான செய்திகள் வெளிவந்தாலும், துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் செய்த ஒரு செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் ஒரு நாள், இளவரசர் ஹம்தான் துபாயின் பிரபலமான மால்களில் ஒன்றான La maison Ani மாலுக்கு திடீரென வருகை தந்தார். அவருடன் நண்பர்கள் மற்றும் அவரது உதவியாளர்களும் வருகை தந்தனர். அவரை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர், அங்கிருந்த கடைகளில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தவர்கள், உணவகங்களில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் என அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஆனால் அவர் செய்தது அதைவிட ஒருபடி மேலே.
அங்குள்ள ஒவ்வொரு கடையிலும், ஒவ்வொரு உணவகத்திலும் சென்று, மக்கள் வாங்கிய பொருட்களுக்கான பில்கள் அனைத்தையும் தானே கட்ட முன்வந்தார். ஷாப்பிங் செய்தவர்கள், சாப்பிட்டவர்கள் என யாருமே இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. முதலில் ஆச்சரியப்பட்ட மக்கள், பின்னர் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இது ஒரு தனிநபரோ, குறிப்பிட்ட சிலரோ செய்த ஷாப்பிங்கிற்கான பில் அல்ல, மாறாக அன்று அந்த மாலில் இருந்த பல நூற்றுக்கணக்கான மக்களின் பில்களை இளவரசர் தானே செலுத்தி இருக்கிறார்.
இளவரசர் ஹம்தான் எளிய சுபாவம் மற்றும் மக்களுடன் எளிதாகப் பழகும் குணம் கொண்டவர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், சாகசப் பயணங்கள் மேற்கொள்வதிலும், விலங்குகள் மீதும் அதீத அன்பும் கொண்டவர். இவரின் இந்தச் செயல், அவரது பெருந்தன்மை மற்றும் மக்களின் மீதான அக்கறையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்த எதிர்பாராத நிகழ்வு, துபாய் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், உலகளவிலும் இளவரசர் ஹம்தான் மீதான நன்மதிப்பை இன்னும் அதிகரித்துள்ளது. அரச குடும்பத்தினர் இப்படி ஒரு செயல் செய்தது அனைவரையும் கவர்ந்தது என்பதில் சந்தேகமில்லை.