

இந்தியாவில் கடந்த இருநாட்களாக தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வருவதற்கு அமெரிக்காவை சேர்ந்த கெவின் வார்ஷ் என்ற நபர் தான் முக்கிய காரணமாக இருப்பதாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் விலை பல ஆண்டுகளாக திடீரென அதிகரித்து வந்தாலும் கடந்தாண்டு ஆரம்பம் முதல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பல மடங்கு அதிகரித்தது. வரலாறு காணாத அளவிற்கு தங்கம் விலை அதிகரித்ததற்கு உலகளில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கணிக்க முடியாத செயல்பாடுகளே முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென உலக நாடுகளுக்கு அறிவித்த வரி விதிப்பு போன்ற மிரட்டல்கள் காரணமாக சீனா உள்ளிட்ட நாடுகள் டாலரின் மேல் இருந்த நம்பிக்கையை இழந்து, தங்களிடமிருந்த அமெரிக்க பத்திரங்களை முன்னெப்போதும் இல்லாத அளவு விற்பனை செய்து, அதற்கு பதிலாக தங்கத்தை வாங்கி குவிக்கத்தொடங்கின.
மற்ற நாடுகளை போலவே இந்தியாவும் கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் 77 டன் தங்கத்தைச் சேர்த்தது. டிரம்பின் இந்த வரி விதிப்பு நடவடிக்கைகளால் அமெரிக்காவில் பணவீக்கம் ஏற்பட்டு டாலரின் மதிப்பு அதிரடியாக சரிந்த நிலையில், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கின. இதனால் டாலருக்கு மாற்றான பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதிய முதலீட்டாளர்கள் அதிகளவு அதில் முதலீடு செய்யத்தொடங்கினர். சர்வதேச அரங்கில் தங்கத்தின் விலை உச்சத்தை அடைய இந்த நிகழ்வே முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
இந்த சூழலில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை அதிகமாக வைப்பதில் ஆர்வம் கொண்ட கெவின் வார்ஷ், அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்ற செய்தி வெளியான அடுத்த நாளே தங்கம், வெள்ளி விலை சரிய தொடங்கியது.
டிரம்பின் அறிவிப்பால், தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வந்தவர்கள் திடீரென அமெரிக்க பங்கு சந்தையிலும், டாலர், அமெரிக்க அரசு பத்திரங்களிலும் முதலீடு செய்வதில் தங்கள் கவனத்தை திருப்பினர். உலகளாவிய பங்குகள் ஏற்றம் கண்டன. அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து தங்கத்தின் விலை சரிந்தது.
இந்நிலையில் அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக கெவின் வார்ஷ் தேர்வு செய்யப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் (ஜனவரி 1-ம்தேதி)அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
பொருளாதாரக் கொள்கைகளில் ‘பருந்து’ (Hawk) என்று அழைக்கப்படும் கெவின் வார்ஷ் , பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை (Interest Rates) அதிரடியாக உயர்த்தத் தயங்காதவர். கெவின் வார்ஷ் பதவிக்கு வந்தால், வட்டி விகிதங்கள் உயரும்; அமெரிக்க டாலரின் மதிப்பு (Dollar Index) எகிறும். டாலர் வலிமையானால், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களின் விலை குறையும் என்பது தான் பொருளாதார விதி.
உலக அளவில் நாள்தோறும் புதிய உச்சங்களை தொட்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த நான்கு நாட்களாக கடுமையான வீழ்ச்சியை சந்தித்த நிலையில், இந்தியாவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரே நாளில் 14,720 ரூபாய் குறைந்தது.
கடந்த மாதம் 29-ம்தேதி 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.16,800க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று(பிப்ரவரி 2-ம்தேதி) ரூ.13,950க்கு விற்பனையானது. 4 நாட்களில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2850யும் ஒரு சவரன் ரூ.22,800யும் குறைந்துள்ளது.
அதேபோல் கடந்த மாதம் 29-ம்தேதி 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.425க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று(பிப்ரவரி 2-ம்தேதி) ரூ.320க்கு விற்பனையானது. 4 நாட்களில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.105 குறைந்துள்ளது.
இதற்கிடையே டாலரின் மீதான நம்பிக்கை அதிகரித்து வரும் நிலையில், வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் முதலீட்டாளர்கள் இந்த சாதக சூழலை பயன்படுத்தி தங்களிடம் இருந்த தங்கத்தை விற்பனை செய்யத்தொடங்கியதும் தங்கத்தின் விலை குறைவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இது போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்டாலும் திடீரென டிரம்ப் ஏதும் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கும் பட்சத்தில் மீண்டும் சர்வதேச பொருளாதார சூழல் மாறி தங்கத்தின் விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மேலும், இது ஒரு தற்காலிகப் பதற்றம் (Panic Selling) தான் என்றும் கெவின் வார்ஷ் பதவி ஏற்றுப் பேசிய பிறகுதான் உண்மையான நிலைமை என்ன என்பது தெரிய வரும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.