விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதன் கதவு பெயர்ந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமான போக்குவரத்து பாதுகாப்பானதாக இருப்பதற்கு அதன் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் முக்கிய காரணமாகும். இதன் காரணமாக விமான விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இருப்பினும் சில சமயங்களில் விபத்துக்கள் தவிர்க்க முடியாததாக உள்ளது. அப்படிதான் அமெரிக்காவைச் சேர்ந்த விமானம் ஒன்று 174 பயணிகளுடன் வானில் பறந்து கொண்டிருக்கும்போது, அதன் கதவு அப்படியே பெயர்ந்து தனியாக பறந்துள்ளது. இதைடுத்து அவசர அவசரமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
இதில் பயம் ஏற்படுத்தும் சம்பவம் என்னவென்றால், கதவின் அருகே இருந்த இருக்கை ஒன்றும் அப்படியே வெளியே பறந்துள்ளது. நல்லவேளை அந்த இருக்கையில் யாரும் இல்லை. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுதொடர்பான காணொளியும், புகைப்படமும் இணையத்தில் பகிரப்பட்டு பகீர் கிளப்பியுள்ளது.
விமானத்திலிருந்து பெயர்த்துகொண்டு பறந்த கதவு எமர்ஜென்சி கதவாகும். இது பலகாலமாக யாரும் பயன்படுத்தாமல் பிளாக் செய்யப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே இந்த சம்பவம் நடந்ததால் உடனடியாக விமானத்தை திருப்பி போர்ட்லாண்ட் விமான நிலையத்திலேயே பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. சுமார் 16 ஆயிரம் அடி உயரத்தில் இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது.
இந்த அதிர்ச்சி சம்பவத்தால் விமானத்தில் பயணித்த பயணிகள் மரண பயத்தை அனுபவித்தனர். இது குறித்து விமான வல்லுனர்கள் கூறுகையில், “இந்த நிகழ்வால் பயணிகள் எந்த அளவுக்கு பயந்திருப்பார்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக கதவு வெளியே பறக்கும்போது சத்தம் மிக அதிகமாக இருந்திருக்கும். பயணிகளுக்கு இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும்” என்றனர்.
இந்த சம்பவம் நடந்த விமானம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தான் சர்டிபிகேட் பெற்றது. அதாவது இது ஒரு புத்தம் புதிய விமானம். இது இயக்கத்திற்கு வந்த சில மாதங்களிலேயே விபத்து நடந்துள்ளதால், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எதனால் இப்படி நடந்தது என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
இருப்பினும் பயணிகள் இந்த நிகழ்வில் பத்திரமாக இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது.