Modi Voting
Modi

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு… வாக்களித்தார் பிரதமர் மோதி!

Published on

இந்தியா முழுவதும் இன்று லோக்சபா தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் பிரதமர் மோதி குஜராத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

18வது லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட நாட்டின் பல இடங்களில் லோக்சபா தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 64 சதவீத மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினார்கள். முதற்கட்ட வாக்குப்பதிவில், 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

இதனைத்தொடர்ந்து, 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதாவது, அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியபிரதேசம், மகாராஷ்திரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், திரிபுரா, மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

இதில், 66.71 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில், ஆண் வாக்காளர்கள் 66.9 சதவீதம், பெண் வாக்காளர்கள் 66.42 சதவீதம், மூன்றாம் பாலினத்தவர்கள் 23.86 சதவீதம் பேர் ஆவர்.
இதனையடுத்து மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் உள்ள 93 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

குஜராத்தில் 25 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 14 தொகுதிகளிலும், மகாராஷ்திராவில் 11 தொகுதிகளிலும், உத்தர பிரதேசத்தில் 10 தொகுதிகளிலும், கோவாவில் 2 தொகுதிகளிலும், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் வங்கத்தில் தலா 2 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கான பிரச்சாரம் கடந்த 3ம் தேதியுடன் முடிவடைந்தது. இன்று காலை முழுவதும் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை: அரசு ஏற்பாடு!
Modi Voting

அந்தவகையில், பிரதமர் மோதி தனது வாக்கை காலையிலேயே செலுத்தினார். குஜராத் தலைநகரின் காந்தி நகரில் உள்ள ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்பட்ட மோதி அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலை பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அதே பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். அடுத்தக்கட்ட வாக்குப்பதிவு மே 13ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com