
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள்.
இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா வருகிற (புதன்கிழமை) நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கார்த்திகை தீபத் திருவிழா நாளை காலை 6 மணியில் இருந்து 7.25 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள தங்ககொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும். அன்று காலை மற்றும் இரவில் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.
பின்னர் 2-ம் நாள் முதல் 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் விழாவும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 6-ம் நாள் விழாவன்று இரவு வெள்ளி ரதம் வீதி உலாவும், 7-ம் நாள் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 6 மணியில் இருந்து 6.48 மணிக்குள் விநாயகர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கார்த்திதை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சி 13-ந் தேதி (10-ம் நாள் விழா) விடியற்காலை 4 மணியளவில் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெறும்.
விழாவை முன்னிட்டு கோவிலில் சாமி வீதி உலா செல்லும் வாகனங்கள் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 6-ம் நாள் விழாவின் சாமி வீதி உலா செல்லும் வெள்ளி ரதத்தின் மர சக்கரம் அகற்றப்பட்டு புதிதாக இரும்பினாலான சக்கரம் பொருத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து வெள்ளி ரதம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் தேரடி வீதியில் நிறுத்தப்பட்டு உள்ள விநாயகர், பராசக்தி அம்மன், முருகர், சண்டிகேஸ்வரர் தேர்கள் வர்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு தீபத் திருவிழாவின் போது 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறையின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.