

தமிழ்நாட்டில் நேற்று 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை வாக்கு சதவீதம் 85.07% ஆக உயர்ந்துள்ளது. பல மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்கிறது. சென்னையிலும் வாக்கு சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
ஆனால் கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 47 ஆயிரம் குறைவாக இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக SIR நடவடிக்கை பார்க்கப்படுகிறது. SIR நடவடிக்கையின் மூலம் பல மாநிலங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
இதன்படி தமிழ்நாட்டிலும் 6 கோடிக்கும் மேலிருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு பிறகு 5.73 கோடியாக குறைந்தது.
நேற்று நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை மாவட்டத்தின் 16 தொகுதிகளில் மெத்தமாக 23.7 லட்சம் பேர் வாக்களித்தனர். எப்போதும் இல்லாத அளவிற்கு சென்னையில் 83.74 சதவீதமாக வாக்கு எண்ணிக்கை உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.
சதவீத அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை உயர்ந்திருந்தாலும், கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் சென்னையில் 24.16 லட்சம் பேர் வாக்களித்தனர்.
ஆனால் நேற்று நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சென்னையில் 23.69 லட்சம் பேர் வாக்களித்தனர். இதன்படி கடந்த தேர்தலை காட்டிலும் இம்முறை 47,322 வாக்குகள் சென்னையில் குறைந்துள்ளன.
கடந்த 2016 தேர்தலில் சென்னையில் 39.75 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். இதில் 24.33 லட்சம் வாக்குகள் (61.72%) பதிவாகின.
கடந்த 2021 தேர்தலில் சென்னையில் 40.04 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். இதில் 24.16 லட்சம் வாக்குகள் (60%) பதிவாகின.
ஆனால் SIR நடவடிக்கைக்குப் பிறகு சென்னையில் வாக்காளர்களின் எண்ணிக்கை 28.30 லட்சமாக குறைந்தது. இதில் தற்போது 23.69 லட்சம் பேர் வாக்களித்துள்ளதால், வாக்களிப்பு சதவிகிதம் 83.74 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இம்முறை கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் சென்னையில் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.