செயற்கை நுண்ணறிவு இன்று மிகப்பெரிய சாதனைகளை செய்து வருகிறது. அந்தவகையில் செயற்கை நுண்ணறிவு உதைவியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தையைப் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
சமீபக்காலமாக ஏஐயின் வளர்ச்சி உச்சத்தை அடைந்திருக்கிறது. இன்று செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அத்தியாவசிய ஒன்றாக மாறிவருகிறது. சாதாரண மக்கள் வரை தனது போனில் AI பயன்படுத்துகிறார்கள். தங்களது சந்தேகங்களையும், தங்களது கற்பனைகளையும் AI யிடமே பகிர்ந்துக்கொள்கிறார்கள். அதேபோல் இப்போது உள்ள குழந்தைகளுக்கு சிறந்த கேம் பார்ட்னர் AI.
இவையனைத்தையும்விட AI மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களே நல்ல வரவேற்பை பெறுகின்றன. இந்த படங்களையே பலரும் பயன்படுத்துகின்றனர். நாளுக்கு நாள் புது புது ஏஐ செயலிகள் அறிமுகமாகி வருகின்றன. அதுவும் இப்போது ஆலோசனை வழங்குவது முதல் முழு கட்டுரையையும் ஏஐயே வழங்கிவிடுகிறது.
இது இப்போதைக்கு வசதியாக இருந்தாலும் போக போக மனிதர்களின் யோசிக்கும் திறனையே அழித்துவிடும். கேட்பதற்கு கசப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை.
சமீபத்தில், மைக்ரோசாப்ட் புதிய AI கருவியை அறிமுகம் செய்தது. அதாவது மருத்துவர் கூறும் குறிப்புகளை எடுத்துக் கொண்டு அதன் பின்னர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வரைமுறைகளை வகுத்து தருகிறது. இதனால் இனி நோயாளி பற்றிய குறிப்பு எடுப்பதற்கு நர்ஸ் அல்லது அவருக்கு இணையான இன்னொருவர் தேவைப்படாது என்றும் டாக்டரே AI உதவி மூலம் நோயாளிகளின் முழு விவரத்தை பதிவு செய்து வைத்துக் கொள்வார் என்றும் கூறப்பட்டது.
இப்படியான நிலையில்தான், ஏஐ உதவியுடன் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது.
மனிதர்களின் பார்வையின்றி (AI) தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி முறையில் IVF (மருத்துவ உதவியுடன் கருத்தரித்தல்) முறையின் மூலம் உலகின் முதல் குழந்தை பிறந்துள்ளது. இந்த புதிய முறையில், வழக்கமாக மனிதர்களின் கையால் மேற்கொள்ளப்படும் Intracytoplasmic Sperm Injection (ICSI) என்ற செயல்முறை 23 படிகளும் முழுமையாக தானியங்கி முறையில், ஏஐ உதவியுடன் முடிக்கப்பட்டது.
Hope IVF Mexico மருத்துவமனையில் 40 வயதான ஒரு பெண், டோனர் முட்டைகளின் உதவியுடன் இந்த முறையில் கருத்தரித்து ஒரு ஆரோக்கிய ஆண் குழந்தையை பெற்றார். ஐந்து முட்டைகள் இந்நவீன முறையில் கருக்கூட்டப்பட்டதில் நான்கு வெற்றிகரமாக கருக்கூட்டப்பட்டன. அதில் ஒன்று வெற்றிகரமாக வளர்ந்தது. அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் மெக்ஸிகோவின் குவாடலஜாராவில் உள்ள Conceivable Life Sciences என்ற நிறுவனத்தின் நிபுணர்களும் டாக்டர்களும் இந்த சாதனையை செய்துள்ளனர்.