மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளின் பாலினத்தைத் தீர்மானிப்பதில் Y குரோமோசோம்களின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக ஆண் குழந்தையை தீர்மானிப்பதில் இந்த Y குரோமோசோம் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால், மனிதர்களின் உடலில் உள்ள Y குரோமோசோம்கள், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதாகவும், எதிர்காலத்தில் மனிதர்களிடமிருந்து இந்த Y குரோமோசோம்கள் முற்றிலுமாக அழிய வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
மனித பரிணாம வளர்ச்சியை ஆராய்ந்த, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேராசிரியரான ஜெனிபர் கிரேவ்ஸ் என்பவர்தான் இந்த அதிர்ச்சியளிக்கும் உண்மையை கண்டுபிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் X மற்றும் Y குரோமோசோம்கள் சமமான அளவில் இருந்தன என்பதைக் கண்டறிந்தார். ஆனால், பல மில்லியன் ஆண்டுகளில் Y-குரோமோசோம் சுமார் 1,400 மரபணுக்களை இழந்துவிட்டது என்பதை நிரூபித்தார்.
பிளாட்டிபஸ் போன்ற பழமையான விலங்குகளின் பாலின குரோமோசோம்களை ஆய்வு செய்தபோது, அவற்றின் X மற்றும் Y குரோமோசோம்கள் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருந்தன. ஆனால் மனிதர்களிடம் வந்தபோது Y-குரோமோசோம் மட்டும் தொடர்ந்து குறைந்து வந்திருக்கிறது.
அவர் தனது கணக்கீட்டின்படி, ஒவ்வொரு 10 லட்சம் ஆண்டுகளுக்கும் சுமார் 10 மரபணுக்கள் வீதம் Y-குரோமோசோம் அழிந்து வருவதாகத் தெரிவித்தார். இதன்படி பார்த்தால், இன்னும் 4.6 மில்லியன் (46 லட்சம்) ஆண்டுகளில் Y-குரோமோசோம் முழுவதுமாக மறைந்துவிடும் என்று அவர் முதலில் கணித்தார். அதாவது ஒருவேளை புதிய மரபணு உருவாகவில்லை என்றால், அது மனித இனத்தின் அழிவிற்கே வழிவகுக்கலாம் என்பதாகும்.
ஜெனிபர் கிரேவ்ஸின் இந்த Y-குரோமோசோம் அழிவு கோட்பாடு பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் டெனிட் பேஜ் போன்ற சில விஞ்ஞானிகள், கடந்த 25 மில்லியன் ஆண்டுகளில் Y-குரோமோசோம் பெரிய அளவில் மரபணுக்களை இழக்கவில்லை என்றும், அது இப்போது நிலைபெற்றுவிட்டதாகவும் வாதிடுகின்றனர்.
Kuroiwa-வின் குழுவானது, 'ஸ்பைனி எலிகள்' (spiny rats) எனப்படும் உயிரினங்களின் 3-வது குரோமோசோமில் அமைந்துள்ள SOX9 மரபணுவிற்கு அருகில், ஒரு சிறிய மரபணு இரட்டிப்பை (duplication) கண்டறிந்தது; இது பாலினத்தைத் தீர்மானிக்கும் ஒரு புதிய 'சுவிட்சாக' (switch) செயல்படக்கூடும். Y குரோமோசோம் மறைந்துபோகக்கூடும் என்றபோதிலும், பாலினத்தைத் தீர்மானிப்பதற்கான ஒரு புதிய வழிமுறை பரிணாம வளர்ச்சி அடையக்கூடும் என்பதையே இந்தக் கண்டுபிடிப்பு உணர்த்துகிறது.
Y குரோமோசோம் மறைந்துபோகும் சாத்தியம், மனித இனத்தின் எதிர்காலம் குறித்த விவாதங்களைத் தூண்டியுள்ளது. சில பல்லிகள் மற்றும் பாம்புகளால் ஆண் துணையின்றி கன்னி இனப்பெருக்கம் மூலம் இனப்பெருக்கம் செய்ய முடியும் என்றாலும், மனிதர்களுக்கும் மற்ற பாலூட்டிகளுக்கும் இனப்பெருக்கத்திற்கு விந்தணுக்களும் ஆண்களும் தேவைப்படுகின்றன. இதன் பொருள், Y குரோமோசோமின் இழப்பு மனித இன அழிவுக்கு வழிவகுக்கும் என்பதாகும். இருப்பினும், ஒரு புதிய பாலின நிர்ணய மரபணுவின் பரிணாம வளர்ச்சி இதைத் தடுக்கக்கூடும்; ஆனால், வெவ்வேறு பிராந்தியங்களில் வெவ்வேறு அமைப்புகள் உருவாகி, புதிய மனித இனங்கள் தோன்றுவதற்கான அபாயமும் உள்ளது.
11 மில்லியன் ஆண்டுகளில், பூமியில் மனிதர்களே இல்லாமல் போகலாம் அல்லது பல தனித்துவமான மனித இனங்கள் இருக்கலாம், ஒவ்வொன்றும் அதன் சொந்த பாலின நிர்ணய அமைப்பைக் கொண்டிருக்கும். நமது Y குரோமோசோமின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது, ஆனால் முள்ளெலிகளில் காணப்படும் தகவமைப்புத் திறன், பரிணாம வளர்ச்சி ஒரு தீர்வை வழங்கக்கூடும் என்று பரிந்துரைக்கிறது.
பொதுவாக ஒரு மனிதனை ஆண் எனத் தீர்மானிப்பதற்கு Y குரோமோசோம் தேவை. அது அழியும்போது ஆண் இனமே உருவாகாமல் மனித இனம் அழிந்துவிடுமோ என்று கவலை ஏற்படலாம். ஆனால், இந்த முள்ளெலிகள் குறித்த ஆய்வு முடிவுகள், மனிதர்களின் உடலில் Y குரோமோசோம் அழிந்தாலும், பாலினத்தை தீர்மானிக்கும் ஜீன்கள் புதியதாக உருவாகும் என்றே விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.