‘பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் நீதி இல்லை; அநீதியே உள்ளது’ முதல்வர் மு.க.ஸ்டாலின்!

முதல்வர் செய்தியாளர் சந்திப்பு
முதல்வர் செய்தியாளர் சந்திப்பு
Published on

டைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (23.07.2024)  நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார். அது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘மைனாரிட்டி பாஜகவை, மெஜாரிட்டி பாஜகவாக ஆக்கிய ஒருசில மாநிலங்களுக்கு மட்டும் சில திட்டங்களை அறிவித்துள்ளார்கள்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கின்ற நிதிநிலை அறிக்கை மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. மூன்றாவது முறையாக வாக்களித்த மக்களுக்கு இந்த பாஜக கூட்டணி அரசு எந்த நன்மையும் செய்யத் தயாராக இல்லை என்பதை இந்த நிதிநிலை அறிக்கை தெளிவாகக் காண்பிக்கிறது. நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு என்று என்னென்ன திட்டங்கள் அறிவிக்கவேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன் நான் டிவிட்டரில் வெளியிட்டிருந்தேன். அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில்,

* மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை விடுவிக்க வேண்டும்,

* கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும்,

* தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திட நிதியை ஒதுக்கீடு செய்யுங்கள்,

* தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலைத் திட்டத்துக்கான ஒப்புதலை உடனடியாக வழங்க வேண்டும் என்பது போன்ற சில கோரிக்கைகளை வைத்திருந்தேன். இதில் எதையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.

மைனாரிட்டி பாஜகவை மெஜாரிட்டி பாஜகவாக ஆக்கிய ஒருசில மாநிலக் கட்சிகளை திருப்திப்படுத்தும் வகையில் சில திட்டங்களை அறிவித்துள்ளார்கள். அறிவித்துள்ளார்களே தவிர, அதையும் நிறைவேற்றுவார்களா என்பது என்னைப் பொறுத்தவரைக்கும் சந்தேகம்தான். எப்படி தமிழ்நாட்டுக்கு மெட்ரோ ரயில் என்று அறிவித்து விட்டு, நிதி ஒதுக்காமல் இன்றைக்கு வரையில் ஏமாற்றி வருவதைப் போல அந்த மாநிலங்களுக்கும் எதிர்காலத்தில் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

தமிழ்நாட்டுக்கான எந்த சிறப்புத் திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. நமது கோரிக்கைகள் எதுவுமே இதில் நிறைவேற்றப்படவில்லை. புதிய ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. ஒன்றிய பாஜக ஆட்சியைத் தாங்கிப்பிடிக்கும் மாநிலங்களைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களையும் நிதி அமைச்சர் மறந்தே போய்விட்டார். தமிழ்நாடு என்ற சொல்லே நிதிநிலை அறிக்கையில் இல்லை என்று சொல்வதைவிட, ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களின் சிந்தனையிலும், செயலிலும் தமிழ்நாடு இல்லை. பாரபட்சமும் ஏமாற்றமும்தான் இந்த அறிக்கையில் இருக்கிறது.

ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது அந்த நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அந்த வகையில், நிதி ஒதுக்கீட்டில் நீதி இல்லை. அநீதியே அதிகம் உள்ளது. வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் நன்மைகள் செய்வதுதான் ஒரு சிறந்த அரசு என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அப்படிதான் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளும் இருக்கிறது. இதை பார்த்தாவது, ஒன்றிய அரசு தன்னுடைய போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வருகின்ற 27ம் தேதி பிரதமரின் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நானும் அதில் பங்கெடுக்கத் திட்டமிட்டு இருந்தேன். ஆனால், நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று நான் முடிவெடுத்திருக்கிறேன். தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதே சரியானது என நினைக்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படியுங்கள்:
பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்த மத்திய பட்ஜெட்!
முதல்வர் செய்தியாளர் சந்திப்பு

அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் அளிக்கையில்,

கேள்வி: 40க்கு 40 வெற்றிதான் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதற்கான காரணம் என்று நினைக்கிறீர்களா?

முதலமைச்சர் பதில்: தமிழ்நாட்டு மக்கள் மீது அவ்வளவு ஆத்திரத்தில் இருக்கிறார்கள் அவர்கள்.

கேள்வி: தமிழ்நாடு மிகவும் பிடித்திருக்கிறது என்று சொல்லியிருந்தார் பிரதமர், அது பற்றி…

முதலமைச்சர் பதில்: தமிழ்நாடு என்று மட்டுமா சொன்னார்? திருக்குறளும் பிடிக்கும் என்று சொன்னாரே, திருக்குறள் என்று, தமிழ்நாடு என்று ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் கிடையாது.

கேள்வி: பத்திரப்பதிவு கட்டணங்களை மாநில அரசுகளுக்கு குறைத்திருக்கிறோம் என்று நிதியமைச்சர் சொல்லியிருக்கிறார். அது பற்றி…

முதலமைச்சர் பதில்: நான்தான் ஒட்டுமொத்தமாக சொல்லிவிட்டேன். தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருக்கிறார்கள். புறக்கணித்த காரணத்தினால் பிரதமர் கூட்டுகின்ற அனைத்து முதலமைச்சர் கூட்டத்தை நான் புறக்கணிக்கப் போகிறேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com