‘ஒருவருக்கு ஒரு லட்டுதான் இலவசம்’ திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

‘ஒருவருக்கு ஒரு லட்டுதான் இலவசம்’ திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

திருமலை திருப்பதியில் தங்குவதற்கான அறை ஒதுக்கீடு, முகத்தை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் பேஸ் ரெககனைஷேசன் டெக்னாலஜி மற்றும் இலவச லட்டு குறித்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "மனிதர்களின் முகத்தை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் பேஸ் ரெககனைஷேசன் டெக்னாலஜி தொழில்நுட்பத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 1ம் தேதி முதல் பரிசோதனை அடிப்படையில் நடைமுறைக்குக்குக் கொண்டு வந்துள்ளது. திருப்பதி மலையில் தங்கும் அறை ஒதுக்கீடு செய்யும் கவுண்டர்கள், அறையை காலி செய்வதற்காக பக்தர்கள் பயன்படுத்தும் துணை விசாரணை காரியாலயங்கள் ஆகியவற்றில் உள்ள வெப் கேமராக்களில் பேஸ் ரெககனைஷேசன் டெக்னாலஜி அடிப்படையில் செயல்படுகின்றன.

இதனால் தங்கும் அறைகளை ஒதுக்கீடாகப் பெறும் பக்தரே அந்த அறையை காலி செய்ய வேண்டும். அதைத் தவிர்த்து வேறு யாராவது அறையை காலி செய்தால் டெபாசிட் பணம் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்காது. இதனால் இடைத்தரகர்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் அடுத்தகட்டமாக ஆன்லைன் மூலம் தங்கும் அறைகளை முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கும் இந்த நடைமுறை அமலுக்குக் கொண்டுவரப்பட உள்ளது. இதனால் ஆன்லைன் மூலம் அறைகளை முன்பதிவு செய்து பயன்படுத்தும் பக்தரே அந்த அறையை துணை விசாரணை காரியாலத்துக்கு நேரடியாகச் சென்று காலி செய்ய வேண்டும். வேறு யாராவது அறையை காலி செய்தால் அவருக்கும் டெபாசிட் பணம் திரும்பக் கிடைக்காது.

திருமலையின் இரண்டாவது வைகுண்டம் காத்திருப்பு மண்டபம் வழியாக இலவச தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச லட்டு டோக்கன் வழங்குவதில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்க இலவச லட்டு டோக்கன் கவுண்டர்களிலும் பேஸ் ரெககனைஷேசன் டெக்னாலஜியுடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்படும். இதனால் ஒரு பக்தர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இலவச லட்டுக்கு உரிய டோக்கன்களைப் பெற இயலாது. மேலும், ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இலவச டோக்கன்களை அங்கு பணியில் இருப்பவர்களாலும் வழங்க இயலாது.

இவை தவிர, பக்தர் ஒருவர் தன்னுடைய ஆதார் அட்டையை சமர்ப்பித்து ஒரு முறை தங்குவதற்கு தேவையான அறையைப் பெற்றுவிட்டால் அதன் பிறகு முப்பது நாட்களுக்குப் பிறகே மீண்டும் திருமலையில் அறையை பெற முடியும்" என்று அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com