

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் மீது நாளை பரிசீலனை நடைபெற்று தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இதுவரை 3,430 வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்த நிலையில் இன்றே கடைசி நாள் என்றால் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இன்று பிற்பகல் 3:00 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவு பெறுவதால் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேட்ப மனுக்களை வாபஸ் பெற 9 ந் தேதி கடைசி நாள் என்றும் அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலையொட்டி வருகிற 10 ந் தேதி முதல் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் நடைபெற உள்ளது. தகவல் சீட்டில் வாக்காளரின் பெயர் ,முகவரி , வாக்குச் சாவடி விவரம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெறும்.
தகுதியான அனைவரையும் உள்ளடக்கிய வாக்காளர் பட்டியல் இன்று இறுதி செய்யப்படுகிறது . இதில் உள்ள விபரங்களின் அடிப்படையில் வாக்காளர் தகவல் சீட்டு ( பூத் ஸ்லிப்) விநியோகிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது .
வாக்காளர் தகவல் சீட்டில் இம்முறை வரிசை எண் மற்றும் பாகம் எண் வழக்கத்தை விட பெரியதாக அச்சிடப்பட்டிருக்கும் என்பதுடன் வழக்கமாக இடம்பெறும் நமது புகைப்படத்திற்கு பதில் (QR) க்யூ ஆர் குறியீடு இடம் பெற்றிருக்கும் என்பதும் சிறப்பு.
வீடு வீடாக வாக்காளர் தகவல் சீட்டுக்களை விநியோகிக்கும் பணியை 17ஆம் தேதிக்குள் முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இன்று தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வது குறிப்பிடத்தக்கது. இவரைப் போலவே இன்று தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யும் பிரபலங்கள் யார் யாரென்று பொறுத்திருந்து பார்ப்போம்.