

இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தலை அறிவித்துள்ளது. நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக ஆட்சியமைக்க , அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆதரவளித்தனர். அதன் பின்னர் அதிமுகவை சேர்ந்த மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி சத்யபாமா, கரூர் தொகுதி எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி சி.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா, பெருந்துறை தொகுதி ஜெயக்குமார் ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்கள்.
இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியானதாக அறிவித்துள்ளது. 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தொடர்பாக வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதால், மீதமுள்ள இரு தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இடைத்தேர்தலை அறிவித்த உடனேயே முதல் கட்சியாக , அதிமுக வேட்பாளர் தேர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர், விருப்ப மனு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்றைய செய்தியாளர் சந்திப்பில் இடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுகவே உற்சாகமாக தேர்தலில் களமிறங்கும் போது , எதிர்கட்சியான திமுக இதுவரை இடைத்தேர்தல் குறித்து எந்த ஒரு கருத்தையும் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தவில்லை. இடைத்தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை போட்டியிட வைத்து , அவரை மீண்டும் சட்டமன்றம் அனுப்ப வேண்டும் என்று திமுக கடுமையான முனைப்பில் இருந்தது. ஆனால், தற்போது அந்த முடிவு கைவிடப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் களமிறங்க தவெகவும், அதிமுக முடிவு செய்து தீவிரமாக களத்தில் இறங்க உள்ள நிலையில் திமுக மௌனம் காத்து வருகிறது. இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவதில் விருப்பம் இல்லாமல் இருக்கிறது. வழக்கமாக எதிர்கட்சியாக இருக்கும் போது தேர்தலை புறக்கணிப்பது திமுகவின் வாடிக்கை என்றாலும் , ஒரு சில முறை போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளது. அதே நேரம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு நடைபெற்ற இடைத்தேர்தல் வேறு, தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் வேறு என்று திமுக நினைக்கிறது. முந்தைய இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்று தெரிந்தாலும் , எதிர்க்கட்சி ஒரு வலிமையான வேட்பாளர் நிறுத்தி கடுமையான போட்டியை கொடுக்கும். அந்த தேர்தலில் ஆளுங்கட்சியின் அதிகாரம் மற்றும் பணபலம் தான் வெற்றியை தீர்மானித்தது , என்றாலும் தங்களது வாக்கு வங்கியை சோதித்துக் கொண்டு சட்டசபை தேர்தலில் களமிறங்க ஒரு வாய்ப்பாக இருந்துள்ளது. இந்த தேர்தலை பொறுத்தவரையில் திமுக தனியாக களமிறங்கினால் அதிமுகவும் எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிப்பதால், எளிதில் தவெக வெற்றி பெறும் என்று நினைக்கிறது.
அதேநேரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து திமுக பின் வாங்கினால் , அதை வைத்தும் தவெகவினர் கிண்டல் செய்து மக்களிடம் "திமுக பயந்துவிட்டதாக பரப்புரை செய்வார்கள்" என்றும் கட்சிக்குள் கருத்து சொல்லியுள்ளனர். திமுக தேர்தலில் களமிறங்குமா? அல்லது புறக்கணிக்குமா? என்று சில தினங்களில் தெரிந்து விடும்..