

வருகிற சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஈரோடு ,கோவை ,நெல்லை ஆகிய ஊர்கள்ல பரப்புரையை தொடர்ந்து நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஆறு வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோவிலில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது பரப்புரையை நிகழ்த்தினார்.
"சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் திமுக தேர்தல் அறிக்கைனு" என்று பாடி சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கையை மக்களிடம் அறிமுகப்படுத்தினார்.
கன்னியாகுமரிக்கு இந்த அரசு கொடுத்த திட்டங்களை கூற ஒரு நாள் போதாது என்று கூறி கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் கண்ணாடி பாலம், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு 400 வருடங்களுக்குப் பிறகு குடமுழுக்கு என 30 அரசுத் திட்டங்கள் நடைபெற்றதாகவும் அதில் சிலவற்றை பட்டியலிட்டார்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 2000 , பால் கொள்முதல் விலை ரூபாய் 5 உயர்த்தப்படும் ,மகளிர் சுய உதவி குழுவினருக்கு கேரண்டி இல்லாமல் ரூபாய் 5 லட்சம் கடன் உதவி , அத்துடன் வீட்டுபஉபயோகப் பொருள் வாங்க கூப்பன் தொகையாக ரூபாய் 8000 என்று சூப்பர் ஸ்டார் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடையே எடுத்துரைத்தார்.
மீனவர்கள் அதிகமுள்ள இங்கு அவர்களுக்கான ஏராளமான நலத்திட்டங்கள் திமுக ஆட்சியில் தான் நிறைவேறியுள்ளது என்றும் மீனவர்களுக்கான டீசல் மானியம் உயர்த்தப்பட்டதையும் மேலும் பல மீன்பிடிப்பு துறைக்காக செய்த ஏராளமான திட்டங்களுடன் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூபாய் 12000 ஆக உயர்த்தப்படும் எனவும் உறுதிமொழி தந்தார். மேலும் 65 வயதிலிருந்து 70 வயது வரை உள்ள மீனவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் "வெளிநாட்டு நிதி பங்களிப்பு மசோதாவிற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தவன் நான் .வெளிநாட்டு நிதி பங்களிப்பு சட்ட திருத்தம் மத சுதந்திரத்திற்கு எதிரானது. கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு எதிரான கொடுங்கோல் சட்டத்திருத்தம் "எனவும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு சட்ட திருத்தத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது திமுக மரியாதை கொண்டுள்ளதாகவும் கலைஞர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாக இபிஎஸ் தவறாக பேசுவதாக குறிப்பிட்ட ஸ்டாலின் வழக்கம் போல "சொல்வதை செய்வோம் நான் கலைஞர் மகன்" எனக்கூறி உரையை முடித்தார்.