

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களின் தேவை பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், கலப்படத்தைத் தடுத்தும் தரத்தை உறுதி செய்யும் பொருட்டு, ஐஸ்கிரீம் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான கடுமையான விதிமுறைகளையும், தீவிர ஆய்வுகளையும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ‘ஐஸ்கிரீம் தயாரிப்பு தேவையான உபகரணங்கள், மூலப்பொருள், காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளிட்டவற்றை கண்காணிக்க வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளது.
கோடை காலம் வந்து விட்டாலே, ஐஸ்கிரீம், குளிர்பானங்களின் விற்பனை களைகட்டும். இந்த காலகட்டத்தில் குளிர்ச்சியாக ஐஸ்கிரீம், குளிர் பானங்களை சாப்பிட பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை அனைவரும் விரும்புவார்கள். இதை கருத்தில் கொண்டு பல நிறுவனங்கள் விற்பனை அதிகரிக்க தரமற்ற பொருட்களை விற்பனை செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
அதனை கருத்தில் கொண்டு கோடைக்காலத் தேவை அதிகரித்து வரும் நிலையில், கலப்படத்தைத் தடுக்கவும் பாதுகாப்புத் தரங்களை உறுதி செய்யவும், ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பான உற்பத்தி செய்யும் அனைத்து தொழிற்சாலைகளிலும் தொடர் ஆய்வுகளையும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்துமாறு தமிழக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறிப்பாக தரமற்ற பொருட்கள், அனுமதிக்கப்படாத செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள் அசுத்தமான நீர் பயன்பாட்டை தடுக்கவும் மற்றும் ஆபத்தான கலப்படங்களை பயன்படுத்தும் நிறுவனங்களை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசுத்தமான நீரையோ அல்லது தடை செய்யப்பட்ட பொருட்களையோ பயன்படுத்தும் உற்பத்தி நிலையங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளதுடன், இக்காலம் முழுவதும் ஆய்வுகளைத் தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
எனவே தயாரிப்பு நிலையங்களில் முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளைப் (FSSAI norms) பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஐஸ்கிரீம் அல்லது குளிர்பானங்களில் கலப்படம், தரம் குறைவு அல்லது பாதுகாப்புச் சிக்கல்கள் இருப்பதாகச் சந்தேகித்தால் அது தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் 1070 என்ற எண்ணில் உள்ள மாவட்டக் கட்டுப்பாட்டு அறைக்கு இதுதொடர்பாக புகாரளிக்கலாம்.
ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் வாங்கும் போது, அவற்றின் தரம், தயாரிப்பு தேதி மற்றும் FSSAI உரிமம் எண் ஆகியவற்றை பொதுமக்கள் சரிபார்த்து வாங்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது. மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக தரமற்ற, பிராண்ட் அல்லாத பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிக தேவை உள்ள கோடை காலத்தில், அசுத்தமான அல்லது தரம் குறைந்த பொருட்கள் விற்பனையாவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.