

பொதுமக்கள் பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறுவதில் உள்ள காலதாமதத்தைத் தவிர்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு இ-சேவை மையச் சான்றிதழ்கள் வழங்கும் முறையில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.
தமிழகத்தில் பொதுமக்கள் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வருவாய் சான்றிதழ் போன்ற பல்வேறு அரசு சான்றிதழ்களை ஆன்லைனில் விரைவாகப் பெறுவதை உறுதி செய்யும் வகையில், வருவாய்த் துறையின் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தி தமிழக அரசு புதிய அரசாணையை (G.O. Ms No. 672) வெளியிட்டுள்ளது.
தற்போதுள்ள பழைய முறைப்படி நான்கு அடுக்கு சரிபார்ப்பு இருந்தது. இந்நிலையில் இது மூன்று அடுக்காக குறைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு நலத்திட்டங்களுக்காக வருவாய் சான்றிதழ்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், தாசில்தார்களுக்கு விண்ணப்பங்களின் பணிச்சுமை அதிகரித்து, சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இதனைத் தவிர்க்கும் வகையில், இனிவரும் காலங்களில் தற்போதுள்ள கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர் என்ற நான்கு அடுக்கு சரிபார்ப்பு முறை மாற்றப்பட்டு, மூன்று நிலைகளில் மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சட்டம் ஒழுங்கை கவனிக்கும் வருவாய் வட்டாட்சியர்களின் (Regular Thasildhar) பணிச்சுமையைக் குறைத்து, அவர்கள் சட்டம்-ஒழுங்கு மற்றும் நில விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்த ஏதுவாக இந்த அதிகாரப் பகிர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய நடைமுறையின் மூலம் சான்றிதழ்கள் விரைவாகக் கிடைக்கும். தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்படும். பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவது குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, இனிமேல் வாரிசுச் சான்று, ஆதிதிராவிடர் வகுப்புச் சான்று, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புச் சான்று (OBC) போன்ற மிக முக்கியமான சான்றிதழ்களை வழங்கும் முழுப் பொறுப்பும் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரிடம் (Tahsildar - Social Security Scheme) ஒப்படைக்கப்படும்.
கணவனால் கைவிடப்பட்ட பெண், முதல் தலைமுறை பட்டதாரி, வேலைவாய்ப்பற்றோர் சான்று, இடம் பெயர்ந்த குடும்ப சான்றிதழ், விவசாய வருமானம் உள்ளிட்ட 15 வகையான சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம் தாசில்தாரிடம் (Tahsildars) இருத்து, துணை தாசில்தாருக்கு (Deputy Tahsildars) மாற்றப்பட்டுள்ளது.
இதன்மூலம் கோப்புகள் தாசில்தார் வரை செல்லத் தேவையில்லை என்பதால் சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். மேலும் பொதுமக்கள் தாலுகா அலுவலகங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
அதுமட்டுமின்றி அந்தந்த வட்டாரத் தலைமை வட்டாட்சியர்களின் (Headquarters Tahsildar) பணிச்சுமை கணிசமாகக் குறைக்கப்பட்டு, சான்றிதழ்கள் விரைவாகக் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது வரை பொதுமக்கள் எளிதில் சான்றிதழ்களைப் பெறும் வகையில் தமிழ்நாடு இ-சேவை மையம் மற்றும் ஆன்லைன் இணையதளம் மூலம் 26 வகையான முக்கிய மின்-சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் பொதுமக்கள் தாசில்தார் அலுவலகங்களுக்கு நேரில் சென்று நீண்ட நேரம் காத்திருக்கத் தேவையில்லை. தமிழ்நாடு மின்ஆளுமை முகமை (TNeGA) மூலம் இந்தச் சேவைகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடனும் விரைவாகவும் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த இ-சேவை மென்பொருள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் தங்களது விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது, நிராகரிப்புக்கான காரணங்கள் என்ன? மற்றும் எந்த அதிகாரியிடம் பரிசீலனையில் உள்ளது என்பதையும் இணையவழியில் நேரடியாக கண்காணிக்கும் வசதியும் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி உங்களது ஒரு சான்றிதழ் விண்ணப்பம் பிழை இருந்து அது திருப்பி அனுப்பப்பட்டால், அதற்காக நீங்கள் அரசு அலுவலகத்திற்கோ அல்லது விண்ணப்பித்த குறிப்பிட்ட இ-சேவை மையத்திற்கோ மீண்டும் செல்ல வேண்டிய அவசியமில்லை. இ-சேவை மென்பொருளில் செய்யப்பட்டுள்ள புதிய மேம்பாட்டின் படி, பொதுமக்கள் தங்களின் சான்றிதழ்களில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய விரும்பினால், குறிப்பிட்ட அரசு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், எங்கிருந்தும் ஆன்லைன் மூலமாகவே திருத்தங்களை மேற்கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மேல்முறையீட்டு அதிகாரிகளும், புதிய மூன்று அடுக்கு சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் முறையை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.