

தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமலில் இருக்கிறது. கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தத் திட்டம் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியிலும் தொடர்கிறது. இதன்படி விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக கடந்த மே 15-ம் தேதி மகளிருக்கு ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கு ஏற்கனவே பலமுறை விண்ணப்பித்தும் சில பெண்களின் விண்ணப்பம் மட்டும் ஒருசில காரணங்களுக்காக தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கும் விதமாக வட்டாட்சியர் அலுவலங்களில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த முகாமில் முதன்முறையாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண்களும் விண்ணப்பிக்கலாமா? அப்படி விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற சந்தேகம் சில பெண்களுக்கு உண்டு. அந்த சந்தேகத்திற்கு விடையளிக்கும் விதமாக திருவள்ளூர் மாவட்டம், கும்முடிபூண்டி வட்டத்தில் பணியாற்றும் தாசில்தார் பதிலளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்முடிபூண்டி வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு ரேஷன் கார்டு விண்ணப்பம், பட்டா மாறுதல், மகளிர் உரிமைத் தொகை, பிறப்பு/இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அரசு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கிடும் மக்கள் குறைதீர்ப்பு ஆணையம் எனும் ஜமபந்தி நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் 1-ம் தேதி தொடங்கிய இந்த முகாம், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் தவிர்த்து 10 நாட்களுக்கு ஜூன் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளிலும் சில குறிப்பிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் பங்கேற்கும் படி கால அட்டவணையும் வெளியானது.
இந்த 10 நாட்கள் முகாமில் கும்முடிபூண்டி வட்டத்தில் உள்ள அனைத்து கிராம பெண்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில், தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களுக்கான சேவையைப் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இது தொடர்பாக அனைத்து கிராம மக்களுக்கும், ஆட்டோவில் ஒலிப்பெருக்கியைப் பொருத்தி அந்தந்த கிராமத்திற்கான தேதியும் அறிவிக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதன்படி ஓபசமுத்திரம், சுண்ணாம்புகுளம், நத்தம், தலையாரிபாளையம் மற்றும் எளாவூர் உள்ளிட்ட கிராம மக்கள் உரிமைத் தொகைக்கு ஏற்கனவே விண்ணப்பித்து வராதவர்கள் உட்பட, புதிதாக விண்ணப்பிப்பவர்களும் தாசில்தார் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி, மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவத்தோடு, ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை நகல்களை பெண்கள் சமர்ப்பித்தனர். இது ஜமபந்தி முகாம் என்பதால், அன்றைய தினம் ஒதுக்கப்பட்ட கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர் (VAO) உள்பட தாசில்தாரும் வந்திருந்தனர்.
விண்ணப்ப படிவத்தை பெண்கள் சமர்ப்பிக்கும் போது, நீங்கள் ஏற்கனவே விண்ணப்பித்து உள்ளீர்களா அல்லது இதுதான் முதன்முறையா எனக் கேட்கப்பட்டது. அதில் ஒருசில பெண்கள், இப்போது தான் புதிய ரேஷன் கார்டு வந்தது; நாங்கள் மகளிர் விண்ணப்பத் தொகைக்கு முதன்முறையாக விண்ணப்பிக்கிறோம் என்றனர்.
புதிய விண்ணப்பங்கள் குறித்து கும்முடிபூண்டி தாசில்தார் மகேஷ் கூறுகையில், “மகளிர் உரிமைத் தொகைக்கு முதன்முறையாக விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் படி தமிழக அரசிடமிருந்து எந்தவொரு உத்தரவும் இதுவரை வரவில்லை. ஆகையால் உங்கள் விண்ணப்பங்களை தற்போதைக்கு பரிசீலனை செய்ய முடியாது.
இருப்பினும் உங்கள் விண்ணப்பங்களை அப்படியே வைத்துக் கொள்கிறோம். தமிழக அரசிடம் இருந்து புதிய முதன்முறை விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய உத்தரவு வந்த பிறகு, இந்த விண்ணப்பங்களை நாங்கள் ஏற்றுக் கொண்டு பரிசீலனை செய்வோம்” என கும்மிடிப்பூண்டி தாசில்தார் தெரிவித்தார்.
முதல்வர் விஜய் தலைமையிலான அரசு விரைவில் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. இந்த பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதி படி மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழலில் ஆயிரக்கணக்கான ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இந்த விண்ணப்ஙகள் ஏற்கப்பட்டு ரேஷன் கார்டு வந்து விட்டால், மகளிர் உரிமைத் தெகைக்கு புதிதாக விண்ணப்பிக்கப் போகும் பெண்களின் எணணிககை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.