
தமிழக அரசு 'எளிமை ஆளுமை' திட்டத்தின் கீழ், அனைவரும் உடனடியாக இணைய வழியில் சேவைகளை பெரும் வகையில், வழிமுறைகளை எளிமையாக மாற்றி அமைத்துள்ளது. அத்தகைய 10 சேவைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. சுகாதார சான்றிதழ்:
சுகாதாரச் சான்றிதழ் பெற வேண்டிய கட்டடங்கள் அல்லது வளாகங்களுக்கு கியூ. ஆர். குறியீட்டுடன் அத்தகைய வளாகங்களின் பொறுப்பாளர்களின் உறுதிமொழியின் அடிப்படையில் உடனடியாக இணையதளத்தில் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2. பொது கட்டிட உரிமம்:
பொது கட்டிட உரிமச் சான்றிதழ் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கட்டிட உறுதித்தன்மை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள காலம் வரை உரிமம் செல்லுபடியாகும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
3. முதியோர் இல்லங்கள் உரிமம்:
முதியோர்களை பராமரிக்கும் இல்லங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, சுய சான்றிதழ் அடிப்படையில் சான்றிதழின் காலவரம்பு 3 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டு கியூ. ஆர். குறியீட்டுடன் இணையதளத்தில் உடனடியாக வழங்கப்படுகிறது.
4. பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமம்:
பணிபுரியும் மகளிருக்கான விடுதிகளின் அத்தியாவசிய வசதிகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும், இணக்கத்தை அதிகரிக்கவும் செயல்முறைகளை எளிதாக்கும் வகையிலும், உரிமத்திற்கான கால வரம்பு 3 வருடங்களிலிருந்து 10 வருடங்களாக நீட்டிக்கப்பட்டு கியூ. ஆர். குறியீட்டுடன் இணையதளத்தில் உடனடியாக வழங்கப்படுகிறது.
5. மகளிர் இல்லங்கள் உரிமம் :
மகளிர் இல்லங்களைப் பதிவு செய்யும் செயல்முறை மிகவும் கடினமாக இருந்த நிலையில் தற்போது முழு செயல்முறையும் சுய சான்றிதழ் வழங்குவதன் மூலம் உரிமம் தானாகவே உருவாக்கப்படுகிறது. உரிமத்திற்கான கால வரம்பு 3 வருடங்களிலிருந்து 10 வருடங்களாக நீட்டிக்கப்பட்டு கியூ. ஆர். குறியீட்டுடன் இணையதளத்தில் உடனடியாக வழங்கப்படுகிறது.
6. சொத்துமதிப்பு சான்றிதழ்:
சொத்துமதிப்பு சான்றிதழ் நிலத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒருவரின் நிதிநிலையை உறுதிப்படுத்த வங்கி இருப்புநிலை அறிக்கை, பட்டயக்கணக்கர் சான்றிதழ், வருமானவரி தாக்கல் போன்ற வழிகள் உள்ளதால் சொத்துமதிப்பு சான்றிதழ் நீக்கப்படுகிறது.
7. வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல் விரிவாக்கம்:
சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் வழக்கமான ஆய்வுகளின் சுமைகளிலிருந்து வெள்ளை வகை தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல் 37ல் இருந்து 609 ஆக விரிவுபடுத்தப்பட்டு இவற்றை தொடங்குவதற்கும் இயங்குவதற்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெறுவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
8. புன்செய் நிலங்களை விவசாயம் அல்லாத செயல்பாட்டிற்கு பயன்படுத்த தடையின்மை சான்றிதழ்:
புன்செய் நிலத்தை விவசாயம் அல்லாத குடியிருப்பு அல்லது வணிக கட்டுமானத்திற்கு பயன்படுத்துவதற்கு, சம்பந்தப்பட்ட வேளாண் துறை அலுவலர்கள், கோரிக்கையை ஆய்வு செய்து செயலாக்கத்திற்கு உட்படுத்த 21 நாட்கள் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 21 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படாவிட்டால், தடையின்மை சான்றிதழ் விண்ணப்பதாரருக்கு தானாகவே உருவாக்கப்பட்டு வழங்கப்படும்.
9. நன்னடத்தை சான்றிதழ்:
எந்தவொரு தனிநபர், அரசு துறை, அரசுப் பொதுத்துறை நிறுவனம் அல்லது பிற அமைப்புகள் நன்னடத்தை சான்றிதழை, இணையவழி மூலமாக விண்ணப்பித்து எளிமையாகவும், துரிதமாகவும் பெறலாம்.
10. அரசாங்க ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மை சான்றிதழ்:
தற்போதைய விதிமுறைகளின்படி, ஒரு அரசு ஊழியர் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க உயர் அதிகாரிகளுக்கு முன் தகவல் அளித்தல் / அரசிடம் தடையின்மை சான்றிதழைப் பெறுதல், துறையிடம் இருந்து அடையாள சான்றிதழைச் சமர்ப்பித்தல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்ய வேண்டும். கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது, துறையில் உள்ள மேல் அதிகாரிகளுக்கு முன் தகவல் கடிதம் அளிக்கும் முறை மட்டும் பின்பற்றப்படும்.
மேற்கூறிய 10 சேவைகளும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.