

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ், உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவைக் குறைப்பது தொடர்பாக இன்று சட்டமன்றத்தில் ஒரு புதிய மற்றும் விழிப்புணர்வு இயக்கம் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். தமிழக மக்களின் சமையலில் பயன்படுத்தப்படும் உப்பின் அளவைக் குறைக்க 'உப்பு குறைப்பு' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். தமிழக மக்களின் அன்றாட உணவில் உப்பின் பயன்பாட்டைக் குறைக்க மாநில அளவில் இந்தவொரு புதிய இயக்கம் தொடங்கப்பட உள்ளது என்று கூறினார்.
சுகாதாரத் துறை சார்பாக இரண்டு அறிவிப்புகளை வெளியிட விரும்புவதாக கூறிய அவர், இதுவரை மருத்துவத்துறை, ஆரம்ப சுகாதாரத்துறை, மருத்துவமனை வரை நோய் வந்த பிறகு அதனை குணப்படுத்துவது என்ற நோக்கில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. வருமுன் காப்பதே சிறந்தது என்ற கூற்றுக்கு ஏற்ப முதல்முறையாக சமூகம், குடும்பம் மற்றும் தனிமனித அளவில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய பாசிடிவ் ஹெல்த் பாலிசியை உருவாக்கும் என்று இந்த அரசு அறிவித்திருந்தது. அதன் முதல் முன்னெடுப்பாக மக்களின் அன்றாட உணவில் உள்ள உப்பின் அளவை குறைக்கும் மாநில அளவிலான இயக்கம் ஒன்றை அறிவிக்க இந்த அரசு முன்வந்துள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 1 கோடியே 80 லட்சம் பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அவர்கள் உணவில் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவே முக்கியக் காரணம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். உப்பின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் இந்த எண்ணிக்கையையும், இதய நோய் அபாயங்களையும் கட்டுப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டார்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு நபர் ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவாகவே உப்பு உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. ஆனால் தமிழக மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 7 முதல் 8 கிராம் வரை உப்பை உட்கொள்கின்றனர். இதில் 88% உப்பு வீட்டுச் சமையல் மூலமாகவே உடலுக்குள் செல்கிறது. மக்கள் எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்கிறார்கள் அதாவது உட்கொள்கிறார்கள் என்பதைத் துல்லியமாகக் கண்டறிய மாநில அளவில் சிறுநீர் மாதிரி கணக்கெடுப்பு (Urine Sample Survey) நடத்தப்படும்.
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் சோடியம் குறைவாக உள்ள மாற்று உப்பை மக்களுக்கு கிடைக்கச் செய்ய சில இடங்களில் முன்மாதிரியாக இந்தத் திட்டம் சோதிக்கப்படும் என்று கூறினார். சமூகநலப் பணியாளர்கள் மூலம் குறிப்பாக உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உப்பைக் குறைப்பது குறித்த மாநிலம் தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
உப்பு என்பது நம் நாட்டின் விடுதலைக்காக மகாத்மா காந்தி கையில் எடுத்த ஆயுதம்; தற்போது உப்புக் குறைப்பு என்பது மக்களின் நல் வாழ்விற்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் நாம் எடுக்கும் ஆயுதம் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் சட்டமன்றத்தில் பேசும் பொழுது பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
உப்பு உபயோகத்தைக் குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், நீரிழிவு, சிறுநீரக நோய் போன்ற தொற்றாத நோய்கள் தமிழ்நாட்டில் பெரும் பிரச்சினையாக உள்ளது. எனவே உப்பை அளவோடு பயன்படுத்தி நலமாக வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.