

தமிழகத்தில் ஆண்டுதோறும் வெப்ப அலையால் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, உடலில் நீர்ச்சத்து குறைந்து,மயக்கம், வாதம் போன்றவற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் வெப்ப அலையால் பொதுமக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்க பொது சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், மாநகராட்சி சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பொது மருத்துவமனைகளிலும் வெயில் பாதிப்பு சிகிச்சைக்காக ‘ஹீட் ஸ்ட்ரோக்’ என்ற சிறப்பு வார்டு அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ஹீட் ஸ்ட்ரோக் உயிரிழப்புகளை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரண்டு படுக்கைகள் வெப்ப பாதிப்பு நோயாளிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்களிலும் உடனடி சிகிச்சை கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
மருந்துகள், அவசர உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விழிப்புணர்வு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெப்ப காலத்தில் உடல்நல பாதிப்புகளைத் தவிர்க்க மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.