

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு பிரச்சினை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டமும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மின்வெட்டு பிரச்சினைகளை சரிசெய்ய கால அவகாசம் வேண்டும் என தமிழக மின்சாரத் துறை கேட்டிருந்தது.
தமிழ்நாட்டில் புதிதாக தவெக அரசு ஆட்சி அமைத்ததும், மின் துறையை சீரமைக்க வேண்டியுள்ளது; ஒவ்வொன்றாக நாங்கள் சீரமைத்து, மின்வெட்டுப் பிரச்சினைக்கு நிரநதர தீர்வு அளிப்போம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் மின்சாரத் துறையில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் நிர்மல் குமார்.
இதன்படி மின்சாரத் துறையின் செலவினங்கள் அதிகரித்துள்ளதாகவும், வருமானம் குறைவாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்காமல் இருக்க மின் கட்டணம் உயர்த்தப்படாது எனவும் தெரவித்தார் அமைச்சர்.
தொடர் மின்வெட்டுப் பிரச்சினையைத் தீர்க்க மின்சாரத் துறை தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இதன்படி தற்போது முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார் மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன்.
தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டுப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண புதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
அவர் விடுத்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் நீடிக்கும் தொடர் மின்வெட்டுப் பிரச்சினையை சரிசெய்ய வேண்டியது அவசியம். இதற்காக ரிப்பீட் டிரிப்பிங் எலிமினேஷன் புரோகிராம் (RTEP) என்ற திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்தை தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எப்போதெல்லாம் மின்தடை ஏற்பட்டுள்ளதோ, அந்த நேரத்தை பகுதி வாரியாக பதிவேட்டை பராமரிக்க வேண்டும். ஒருசில ஃபீடர்கள், துணைமின் நிலையங்கள் மற்றும் மின் வலையமைப்பு பகுதிகளில் மட்டும் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. இந்த மின்தடையைத் தடுக்க புதிய திட்டத்தை முதலில், அதிகளவில் மின்வெட்டு ஏற்படும் பகுதிகளில் செயல்படுத்த வேண்டும்” என மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதவிர தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழக ஊழியர்கள் அனைவரும், பணி நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது
கோடை காலம் வந்து விட்டாலே, பொதுமக்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக மின்வெட்டு மாறியிருக்கிறது. இந்நிலையில் இதற்கு முடிவு கட்ட முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் படி, மின்சாரத் துறையை லாபகரமானதாக மாற்றினால் மட்டுமே மின்வெட்டு பிரச்சினை முடிவுக்கு வரும் போலிருக்கிறது.
இருப்பினும் தற்போது செயல்படுத்தப்பட உள்ள RTEP திட்டத்தின் மூலம் மின்வெட்டை குறைக்க முடியும் என மின்சார வாரியம் முழுமையாக நம்புகிறது. இருப்பினும் இந்தத் திட்டம் எந்த அளவிற்கு பலனளிக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு தான், அதன் செயல்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். மேலும் உங்கள் பகுதியில் மின்சாரம் தடைபடுவதற்கான காரணங்கள் மற்றும் அதனைத் தீர்க்க தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இந்தத் திட்டத்தின் வாயிலாக பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்.