

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று வெளியிட்டார். தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் 13ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30-ம் தேதி நிறைவடையும். ஜூலை 13ஆம் தேதி 7.5% ஒதுக்கீடு பிரிவினருக்கு பொறியியல் கலந்தாய்வு தொடக்கம் என்றும், பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வு ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும் என்றும், 7.5% இட ஒதுக்கீடு, விளையாட்டு ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகளுக்கு ஜூலை 13 14ஆம் தேதிகளில் கலந்தாய்வு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களில் சேர்வதற்கு 2.36 லட்சம் மாணவ, மாணவிகள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் 1,30,767 பேர் மாணவர்கள், 1,05,246 பேர் மாணவிகள். மூன்றாம் பாலினத்தவர் 5 என மொத்த எண்ணிக்கை 2,36,017 பேர். இந்த ஆண்டு 6ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 50, 494 பேர் பொறியல் படிப்பு சேர விண்ணப்பித்து இருந்தனர். இதில் பள்ளிக்கல்வி துறையால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 46,604 மாணவர்களுக்கு தரவரிசையில் வழங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக அனைவருக்கும் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களுடைய சான்றிதழ்கள் ஆன்லைனில் சரிபார்க்கப்பட்டன. இந்நிலையில் இன்று சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் பொறியியல் தரவரிசைப் பட்டியலை இன்று காலை 10 மணி அளவில் அமைச்சர் விஸ்வநாதன் அவர்கள் வெளியிட்டார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் துறைசார் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் பொறியியல் படிப்புக்கு 2 லட்சம் இடங்கள் ஒற்றை சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. அதன்படி 2026 ஆம் ஆண்டு பொறியல் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவும் நடந்தது. இன்று பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. https://www.tneaonline.org/என்ற இணையதளத்தில் தரவரிசை மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.
2,36,017 பேருக்கான தரவரிசை வெளியானது. அதில் 53 மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்று கூறிய அமைச்சர், இன்று வெளியான தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை சரி செய்வதற்கான குறைதீர்ப்பு கால அவகாசம் ஜுலை 1ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். மாணவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை அணுகி ஏதேனும் குறைகள் இருந்தால் தீர்வு காணலாம் என்றும், தரவரிசைப் பட்டியலில் பெயர் விடுபட்டு இருந்தால் அல்லது ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் 6ஆம் தேதிக்குள் மாணவர்கள் அணுகி தங்கள் குறைகளை பதிவு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.
பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை தர்மபுரியைச் சேர்ந்த அக்ஷிதாவும், இரண்டாம் இடத்தை திருப்பூர் ரோஹித் பாலன் என்பவரும், மூன்றாம் இடத்தை நாமக்கல்லைச் சேர்ந்த வெங்கட கிருஷ்ணன் என்பவரும் இடம் பிடித்தனர்.