சென்னை மக்களே உஷார்..! இனி குடியிருப்பு பகுதிகளை வணிக நோக்கத்திற்கு மாற்றினால் 'சீல்'..!

மண்டல மற்றும் வட்டார அளவில் புதிய கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பு; மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் அபராதம் விதிக்க ஆணையர் சமீரன் உத்தரவு.
விதிமீறல் கட்டிடங்கள்
விதிமீறல் கட்டிடங்கள்Source:Dailythanthi
Updated on

சென்னையில் குடியிருப்பு கட்டடத்திற்கான (Residential Properties)அனுமதி பெற்ற கட்டிடங்களை வணிகப் பயன்பாட்டிற்காக(Commercial Use) பயன்படுத்துவது மற்றும் திட்ட அனுமதிக்கு மாறான விதிமீறல் கட்டிடங்கள் ஆகியவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அமலாக்கப் பணிகளை கண்காணிப்பதற்கு வட்டார அளவில், வட்டார துணை ஆணையர், கண்காணிப்பு பொறியாளர், முதுநிலை வருவாய் அலுவலர் மற்றும் மண்டல அலுவலர் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஒரு மற்றொரு குழுவில் மண்டல அளவில் மண்டல அலுவலர், செயற்பொறியாளர், முதுநிலை வருவாய் அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோரைக் கொண்ட மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டு செயல்படுகிறது.

சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரான் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது. அதன்படி சென்னை மாநகராட்சி தனது குடியிருப்பு பகுதிகளை வணிகப் பயன்பாட்டிற்கு மாற்றுபவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. விதிகளுக்கு முரணாக வீடுகளை வணிக நோக்கத்திற்குப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், கட்டடத்தை சீல் வைப்பது மற்றும் மின்சார இணைப்பைத் துண்டிப்பது உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்புப் பகுதிகளை வணிகப் பயன்பாட்டிற்கு மாற்ற வேண்டும் எனில், உரிய திட்ட அனுமதி மற்றும் உரிமம் (Planning Permit and Trade License) பெற வேண்டும். அனுமதி இன்றி வணிகப் பயன்பாட்டில் உள்ள கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விதிகளை மீறியதற்காகவும், வரி ஏய்ப்பிற்காகவும் கடுமையான அபராதமும் விதிக்கப்படும். எச்சரிக்கையை மீறி வணிக நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட்டால் அந்த வளாகங்களுக்கு சீல் வைக்கப்படும்.

முறையான அனுமதி இன்றி வணிக நிறுவனங்கள் இயங்கினால், அவற்றிற்கு அபராதம் விதிக்கப்படுவதோடு வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் அகற்றப்படும். குடியிருப்பு பகுதிகளில் வணிக நிறுவனங்கள் இயங்குவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன நிறுத்துமிட பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் வணிக நிறுவனங்கள் சட்ட விரோதமாகச் செயல்படுவதை தடுக்கவும், நகர்ப்புற ஒழுங்கு முறையைப் பராமரிக்கும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Chennai Corporation White House
Chennai Corporation White House

இதன்மூலம் குடியிருப்புகளை வணிக நோக்கில் பயன்படுத்தி குறைந்த சொத்து வரி செலுத்தி வரும் சொத்து உரிமையாளரைக் கண்டறிந்து உரிய வரி வசூலிக்கப்படும். பார்க்கிங் தளங்களை கடைகளாக மாற்றுவது, வீட்டின் தரைதளத்தை வணிக அலுவலகங்களுக்கு வாடகைக்கு விடுவது போன்ற விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் வணிக நிறுவனங்கள் அமைப்பதால் ஏற்படும் பார்க்கிங் ஆக்கிரமிப்புகள் மற்றும் பொதுமக்களுக்கான இடையூறுகள் இதன் மூலம் தடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களுடைய குடியிருப்பு சொத்துகளை வணிகப் பயன்பாட்டிற்காக மாற்ற விரும்பினால், சென்னை மாநகராட்சி மற்றும் சி எம் டி ஏ (CMDA) அமைப்பிடம் உரிய அனுமதி மற்றும் முறையான வகை மாற்ற (Zoning Reclassification) சான்றிதழ்களைப் பெற வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல தடை? – தமிழக அரசின் அதிரடி சட்ட திருத்தம்!
விதிமீறல் கட்டிடங்கள்
இதையும் படியுங்கள்:
வெறும் 5 ரூபாய் தான்..! வந்துவிட்டது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்!
விதிமீறல் கட்டிடங்கள்
logo
Kalki Online
kalkionline.com