

தமிழ்நாடு முழுவதும் நேற்று(8.2.26) நடைபெறவிருந்த TNPSC குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது(Main Exam), சென்னை மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 828 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வு நேற்று(ஜனவரி 8-ம்தேதி) தமிழகம் முழுவதும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
முன்னதாக அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி, பிப்ரவரி 8-ம்தேதி(நேற்று) மதிய அமர்வில் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வும் (தாள் I), பிப்ரவரி 22-ம் தேதி பொது அறிவுத் தேர்வும் (தாள் II) நடைபெறுவதாக இருந்தது.
தமிழகம் முழுவதும்,காலை மற்றும் பிற்பகல் என 2 பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலையில் நடைபெறும் தேர்வை 9223 பேர் எழுத இருப்பதாகவும் பிற்பகலில் நடைபெறும் தேர்வை 9244 பேர் எழுத இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சென்னையில் பல்வேறு மையங்களில் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் சென்னையில் மட்டும் 3585 பேர் தேர்வு எழுத தயாராகி இருந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெறவிருந்த குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வில் சென்னையில் உள்ள 3 தேர்வு மையங்களில் ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட தேர்வர்களுக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்யும் வகையில், தமிழகம் முழுவதும் நேற்றைய தேர்வை ரத்து செய்தாக TNPSC டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்.
அந்த அறிவிப்பு தேர்வுகளுக்காக தயாரானவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு முக்கிய தேர்வாக அமைய வேண்டிய இந்தத் தேர்வு நாள், நிர்வாகக் குளறுபடிகளாலும், தொழில்நுட்பக் கோளாறுகளாலும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இது குறித்து தேர்வாணையக் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நேற்று நடைபெறவிருந்த தேர்வுகள் (ஜனவரி 8-ம்தேதி)தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
தேர்வு நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாக புதிய தேதி அறிவிக்கப்படும். புதிய தேர்வு மையம் மற்றும் ஹால் டிக்கெட் விவரங்கள் தேர்வர்களின் SMS மற்றும் E-Mail முகவரிக்கு நேரடியாக அனுப்பப்படும் என TNPSC அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது’.
அதேநேரத்தில், 22.02.2026 அன்று நடைபெறவிருந்த குரூப் 2 பொது அறிவுத் தேர்வு (தாள்-II) திட்டமிட்டபடி நடைபெறும். இதற்கான புதிய ஹால் டிக்கெட் பிப்ரவரி 13-ம்தேதி அன்று வெளியாகும் என TNPSC தெரிவித்துள்ளது.
தேர்வர்கள் தேர்வு தள்ளிப் போய் உள்ள இந்த 15 முதல் 20 நாட்களைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும். நேற்றைய தேர்வு ரத்தானதை நினைத்து கவனம் சிதறாமல் வரும் பிப்ரவரி 22-ம்தேதி நடைபெறவுள்ள பொது அறிவு (தாள்-2) தேர்வுக்கு முழு வீச்சில் தயாராவது ஒன்றே வெற்றிக்கான வழியாகும்.
தேர்வுக்கான புதிய தேதிகள் குறித்து TNPSC அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.