

பலருக்கும் அரசு வேலை பார்க்க வேண்டும் என்ற கனவு, லட்சியம் இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் அரசு வேலைக்காக தயாராகி வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் நடத்தப்படும் TNPSC குரூப்-1, 2, 2ஏ, 4, 5 தேர்வுக்கு பல லட்சம் பேர் ஆர்வத்துடன் விண்ணப்பித்து தேர்வு எழுதி வருகின்றனர். இதற்காக டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் குரூப் வாரியாக தேர்வுகளை நடத்தி வருகிறது. டிஎன்பிஎஸ்சி மட்டுமில்லாமல் மற்ற அரசு போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.
ஆசிரயர், மின்வாரியம் போன்ற துறை சார்ந்த தேர்வு எழுதும் தேர்வர்களும் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் கலந்து கொள்வதால் அத்தேர்வு மிகவும் போட்டித்தன்மை கொண்டதாக மாறிவருகிறது.
இதுமட்டுமின்றி தனியார் துறையில் பணி நிரந்தரமின்மை, ஆட்குறைப்பு, சாட்ஜிபிடி, கிளாட் AI வளர்ச்சி காரணமாக தனியார் துறை வேலைவாய்ப்புகளில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இதன்காரணமாக, அரசு போட்டித் தேர்வுக்கான தேடல் அதிகரித்து காணப்படுகிறது. அதனாலேயே தனியார் நிறுவனங்களில் வேலைபார்த்து வருபவர்கள் கூட அரசு வேலை வேண்டி இதற்காக நேரம் ஒதுக்கி டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும்.
அந்த வகையில் தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு, தேர்வு நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) செய்து வருகிறது. அதன்படி, குரூப்-1, 2, 2ஏ, 4, 5 என பல்வேறு பதவிகளுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் அரசு துறைகளில் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் பல லட்சம் தேர்வர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த டிஎன்பிஎஸ்சி 2026-ம் ஆண்டுக்கான குரூப் 1 முதல் நிலைத் தேர்வு (Group-1 Service) அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் துணை ஆட்சியர் (Deputy Collector) உள்ளிட்ட 5 வகையான பதவிகளுக்கு மொத்தம் 26 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலைத் தேர்வு (Group-1 Service) வருகிற செப்டம்பர் மாதம் 6-ந்தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி- TNPSC) அறிவித்துள்ளது.
தமிழக அரசுத் துறைகளில் துணை ஆட்சியர் , காவல் துணை கண்காணிப்பாளர் , வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துணைப் பதிவாளர் , ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்கள், மாவட்டப் பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஒருவர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படும். ஏதேனும் டிகிரி உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இப்பணிகளுக்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 34 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 39 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் குரூப் 1 தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு (Prelims), முதன்மைத் தேர்வு (Mains) மற்றும் நேர்முகத் தேர்வு (Interview) ஆகிய மூன்று நிலைகளின் அடிப்படையில் நடைபெறுகின்றன.
முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணலில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.
தேர்வு எழுத விருப்பம் உள்ள விண்ணப்பத்தாரர்கள் வரும் ஜூன் 30-ம்தேதி முதல் ஜூலை 29-ம்தேதி இரவு 11.59 மணி(PM) வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பத்தை திருத்தம் செய்ய ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 4-ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம். ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-I (தொகுதி I பணிகள் - Preliminary)க்கான முதல் நிலைத் தேர்வு செப்டம்பர் 6-ம்தேதி அன்று நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மேலும் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பங்களை www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையின் முழுப் பட்டியலை அறிய அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tnpsc.gov.in பக்கத்தை அணுகி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2026-ம் ஆண்டு தேர்வுகளுக்கான இந்த முன்னோட்டம், தேர்வர்கள் தங்கள் இலக்கை நோக்கி முன்னேற உதவும்.