

பலருக்கும் அரசு வேலை பார்க்க வேண்டும் என்ற கனவு, லட்சியம் இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் அரசு வேலைக்காக தயாராகி வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் நடத்தப்படும் TNPSC குரூப்-1, 2, 2ஏ, 4, 5 தேர்வுக்கு பல லட்சம் பேர் ஆர்வத்துடன் விண்ணப்பித்து தேர்வு எழுதி வருகின்றனர். அந்தவகையில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஆண்டுதோறும் குரூப் வாரியாக தேர்வு நடத்தி, டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வை லட்சக்கணக்கானவர்கள் எழுதி வருகின்றனர்.
தனியார் துறையில் பணி நிரந்தரமின்மை, ஆட்குறைப்பு, சாட்ஜிபிடி, கிளாட் AI வளர்ச்சி காரணமாக தனியார் துறை வேலைவாய்ப்புகளில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இதன்காரணமாக, அரசு போட்டித் தேர்வுக்கான தேடல் அதிகரித்து காணப்படுகிறது.
அதனாலேயே தனியார் நிறுவனங்களில் வேலைபார்த்து வருபவர்கள் கூட அரசு வேலை வேண்டி இதற்காக நேரம் ஒதுக்கி டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது டிஎன்பிஎஸ்சி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி - TNPSC) ஆண்டு அட்டவணையில் தெரிவித்திருந்தபடி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள பணிப்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் மற்றும் சாலை ஆய்வாளர் உள்ளிட்ட 56 பதவிகளுக்கான 839 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த ஆட்சேர்ப்பில் பணிப்பார்வையாளர், விடுதி கண்காணிப்பாளர், இளநிலை வரைதொழில் அலுவலர், உதவி மேலாளர், சுரங்க முதலாளி, சிறப்பு பணிப்பார்வையாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-2, சாலை ஆய்வாளர், மீன்வள சார் ஆய்வாளர், இளநிலை பயிற்சி அலுவலர் – மின்பணியாளர் மற்றும் மெக்கானிக் மின்சார வாகனம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகள் இடம்பெற்றுள்ளன. தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு முக்கிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
வயதுத் தகுதி: 2026 ஜூலை 1-ம்தேதி நிலவரப்படி குறைந்தபட்சம் 18 வயதிற்கு மேல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு வயது வரம்பு கூடுதலாக இருக்கும். அதாவது இளநிலை பயிற்சி அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-2 போன்ற சில பதவிகளுக்கு குறைந்தபட்ச வயது 21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எஸ்.சி (SC), எஸ்.சி.ஏ (SC(A)), எஸ்.டி (ST), எம்.பி.சி (MBC), பி.சி (BC) மற்றும் பி.சி.எம் (BCM) பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வுகள், எழுத்துத் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 என இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
கல்வித்தகுதி: இந்தப் பதவிகளுக்கான கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் பணியின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஐடிஐ, டிப்ளமோ, பி.இ., பி.டெக் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளை முடித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக் கட்டணம்: ரூ.100, இருப்பினும் எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, எம்பிசி, பிசி மற்றும் பிசிஎம் மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப திருத்த காலம்: விண்ணப்பத்தை திருத்தம் செய்ய ஆகஸ்ட் 19 முதல் 21 வரை 3 நாட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இக்கால கட்டத்தில் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களைத் திருத்தம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜூலை 17-ம்தேதி முதல் ஆகஸ்ட் 15-ம்தேதி நள்ளிரவு 11.59 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பம் உள்ளவர்கள் https://apply.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
அதாவது இணையதள பக்கத்திற்கு சென்று அங்குள்ள விண்ணப்பத்தில் உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக பதிவிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பித்த பின்னர் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தாள் வாரியாக தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் தொடர்பான விவரங்கள் தேர்வாணைய இணைதளம் www.tnpsc.gov.in வாயிலாக மட்டுமே வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆட்சேர்ப்புக்கான முழுமையான அறிவிப்பு, பதவிவாரியான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.