

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் மொபைல்போனை பயன்படுத்தி வருவதால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் சேவையை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றன. இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ரீசார்ஜ் கட்டணங்களை எடுத்துப் பார்த்தால், இப்போதைய விலையை விட பல மடங்கு குறைவாகவே இருந்தது.
ஜியோ நிறுவனம் தொலைத் தொடர்பு துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு வரை ரீசார்ஜ் கட்டணங்கள் குறைவாகவும், டேட்டா மற்றும் அழைப்பு உள்ளிட்டவைகள் அளவாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. ஆனால் ஜியோவின் வருகைக்குப் பிறகு இணைய சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமானது. அதோடு பயனுபடுத்தும் நேரமும் அதிகமானது. அதற்கேற்ப அளவற்ற அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட இணைய டேட்டா என பல்வேறு புதிய ரீசார்ஜ் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
புதிய ரீசார்ஜ் திட்டங்களுக்கு ஏற்ப அதன் விலையும் தாறுமாறாக உயர்ந்தது. தற்போது இந்த விலை உயர்வு பலருக்கும் பழகி விட்ட ஒன்றாக இருந்தாலும், பழைய முறைப்படி அழைப்புகளை மட்டுமே கொண்ட ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டு வர இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) முடிவு செய்துள்ளது.
இந்தத் மீண்டும் திட்டம் அமலுக்கு வந்தால், சாமானிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் இதனால் ரீசார்ஜ் கட்டணம் குறையும் என்பதால், இந்தத் திட்டத்திற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஜியோவின் வருகைக்கு முன்பு, ரீசார்ஜ் செய்யவிலில்லை என்றாலும் மொபைல் எண்ணிற்கு அழைப்புகள் வரும். ஆனால் தற்போது நிலைமையே வேறு. குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்தால் தான் அழைப்புகளே உங்கள் எண்ணிற்கு வரும். அதோடு தற்போது குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணமே ரூ.199 என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பெல்லாம் 10 ரூபாய்க்கு கூட ரீசார்ஜ் செய்து பேச முடியும். ஆனால் இப்போது குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகை 20 மடங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும் அளவற்ற டேட்டா மற்றும் அழைப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்து வருகிறது. ஆனால் இதனால் பாதிக்கப்படுவது என்னவோ கடைநிலையில் உள்ள சாமானிய மக்கள் தான்.
தற்போது குறைந்தபட்ச கட்டணத்தில் ரீசார்ஜ் செய்தால், 28 நாட்கள் அளவற்ற அழைப்புகளுடன், 2GB இணைய டேட்டா வழங்கப்படுகிறது. இதில் இணைய டேட்டாவை மட்டும் எடுத்து விட்டு, அழைப்புகளுக்காக மட்டும் ரீசார்ஜ் செய்யும் புதிய வசதியைக் கெண்டு வர டிராய் முயற்சி செய்து வருகிறது. இதன்மூலம் ரீசார்ஜ் கட்டணம் 20% வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டு வர தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கீபேட் போன் வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யும் போது, அவர்களுக்கு வழங்கப்படும் இணைய டேட்டா வீணாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தான் இணைய டேட்டா தேவைப்படாதவர்கள், அழைப்புகளை மட்டும் மேற்கொள்ளும் படியான ரீசார்ஜை செய்து கொள்ளலாம்.
இந்தியாவில் தற்போது ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், பிஎஸ்என்எல் என்ற பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமும் செயல்பாட்டில் உள்ளன.
டிராய் கொண்டு வரவுள்ள இந்தப் புதிய திட்டத்தை தனியார் நிறுவனங்கள் மட்டுமே எதிர்க்கின்றன. இதனால் மீண்டும் பிஎஸ்என்எல் சிம் கார்டை பொதுமக்கள் வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 5G அளவற்ற இணைய சேவையில் கட்டுப்பாடுகளை கொண்டு வரவும், கட்டணத்தை உயர்த்தவும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. ஒருவேளை இது நடந்தால், 5G வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.