

ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பிரிவில் திருநங்கைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) அறிவித்துள்ளது. பாலின மாற்றம் செய்து கொண்டவர்கள் மற்றும் பாலின வளர்ச்சியில் வேறுபாடுகள் கொண்ட (DSD) வீரர்கள், இனி பெண்கள் பிரிவில் பங்கேற்க முடியாது.
2028-ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் முதல், பெண்கள் பிரிவில் திருநங்கைகள் (ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்கள்) பங்கேற்பதற்குச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்துள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற ஐஓசி செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, 10 பக்கங்கள் கொண்ட புதிய கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது. இதன்படி, 'உயிரியல் ரீதியான பெண்கள்' (Biological Females) மட்டுமே பெண்கள் பிரிவில் பங்கேற்க முடியும் என்ற புதிய கொள்கை, போட்டியில் சமமான வாய்ப்பை உறுதி செய்யக் கொண்டு வரப்பட்டுள்ளது.
2028 ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து இந்த விதிமுறை நடைமுறைக்கு வருகிறது. உயிரியல் ரீதியான ஆண்கள், அதாவது திருநங்கைகள், தசை வலிமை மற்றும் சகிப்புத்தன்மை போன்ற உடல் ரீதியான சாதகங்களைத் தக்கவைத்துக் கொள்வதால், நியாயமான போட்டியை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தகுதியை உறுதிப்படுத்துவதற்குக் கட்டாய மரபணுச் சோதனை (Gene screening) நடத்தப்படும். அதேசமயம், 'முழுமையான ஆண்ட்ரோஜன் இன்சென்சிட்டிவிட்டி சிண்ட்ரோம்' (CAIS) போன்ற அரிய மருத்துவக் கோளாறுகள் கொண்டவர்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படலாம். இந்தப் புதிய கொள்கையானது சர்வதேச விளையாட்டு அரங்கில் திருநங்கைகளின் பங்கேற்பு குறித்த விவாதத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐஓசியின் முதல் பெண் தலைவரான கார்ஸ்டி கோவென்ட்ரி இதுகுறித்து கூறுகையில், "ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு சிறிய வினாடி கூட வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கும். எனவே, உயிரியல் ரீதியான ஆண்கள், பெண்கள் பிரிவில் போட்டியிடுவது நியாயமாக இருக்காது. பெண்கள் பிரிவின் நேர்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் நோக்கம்," என்று தெரிவித்துள்ளார்.