

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு, 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 3-ம்தேதி நடைபெற்ற நிலையில் வினாத்தாள் கசிந்ததால், நடந்து முடிந்த நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, ஜூன் 21-ம் தேதி நடத்த நீட் மறுதேர்வை நாடு முழுவதும் 20 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் 1.36 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் ஜூலை 16-ம்தேதி நீட் மறுதேர்வு முடிவுகளை தேசியத் தேர்வுகள் வாரியம் (National Democratic Alliance- NDA) வெளியிட்டது.
நீட் சாதனை :
இத்தேர்வில் 11.21 லட்சம் பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், பஞ்சாப்பை சேர்ந்த ஆர்யன் குப்தா, ஹரியானாவைச் சேர்ந்த பன்சூல் பன்சால் ஆகிய இரு மாணவர்கள் 720-க்கு 715 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்த வேங்கடபதி வேலாயுதம், 720-க்கு 705 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதல் இடத்தையும், நாட்டின் தரவரிசை பட்டியலில் 12-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் நீட் தேர்வில் 245 மதிப்பெண்கள் பெற்று முதல்முறையாக தேர்ச்சி பெற்று சத்தமில்லாமல் சாதனை படைத்துள்ளார்.
கல்வி வளங்கள் குறைந்த தொலைதூர பழங்குடியின கிராமத்தில் பிறந்த ஏற்காடு குண்டூரைச் சேர்ந்த ஈ. நிவேதா, பல்வேறு தடைகளைத் தாண்டி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இப்பகுதியிலிருந்து இச்சாதனையைப் படைத்த முதல் மாணவி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
நிவேதா தனது முதல் முயற்சியிலேயே 720-க்கு 245 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். அதாவது நீட் தேர்வு நடைமுறை தொடங்கப்பட்ட பின்னர் ஏற்காடு மலைவாழ் கிராமங்களில் இதுவரை யாரும் தேர்ச்சி பெறாத நிலையில், குண்டூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 18 மலைவாழ் பழங்குடியின கிராமங்களிலிருந்து தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் மாணவி இவரே.
சேலம் மாவட்ட சுற்றுலாத் தலமான ஏற்காட்டின் பிரதான பகுதியில் இருந்து 7 கிலோமீட்டர் பள்ளத்தாக்கில் உள்ள எழில் கொஞ்சும் குண்டூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு தினக்கூலித் தொழிலாளியான ஏழுமலை மற்றும் இல்லத்தரசியான மணிமேகலை ஆகியோரின் மகளான நிவேதா, பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியிலும், பின்னர் மேல்நிலைக் கல்வியை அரசு உதவி பெறும் நசரேத் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அவர் 496 மதிப்பெண்களைப் பெற்றார்.
இதுகுறித்து பேசிய நிவேதா, ஏற்காட்டிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள தனது கிராமத்தில் நிலையான இணைய வசதி இல்லாததால், நீட் (NEET) தேர்வுக்குத் தயாராவது எளிதாக இருக்கவில்லை என்று கூறினார். "கிராமத்தில் இணைய வசதி இல்லாததால், இணையவழிப் பாடக்குறிப்புகளைப் பெறுவது கடினமாக இருந்தது.
இணையத்தைப் பயன்படுத்த நான் அடிக்கடி கிராமத்திற்கு வெளியே செல்ல வேண்டியிருந்தது. எங்கள் கிராமத்திற்குப் பேருந்து சேவைகளே சமீபத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன’ என்று அவர் கூறினார்.
‘எனது பள்ளிப்படிப்பு முழுவதும் அரசுப் பள்ளிகளிலேயே பயின்றேன். 12-ஆம் வகுப்புக்குப் பிறகு அந்த அரசு சாரா அமைப்பு வழங்கிய வழிகாட்டுதல், நீட் தேர்வுக்குத் தயாராக எனக்கு உதவியது. முதல் முயற்சியிலேயே 245 மதிப்பெண்களைப் பெற்ற நான், இப்போது எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளேன்’ என்று அவர் கூறினார்.
இந்த மதிப்பெண் அரசுக்கல்லூரியில் படிக்க பத்தாது. தனியார் மருத்துவ கல்லூரியில் தான் படிக்க முடியும். அப்படி தனியார் கல்லுரியில் படிக்கும் அளவிற்கு தங்களுக்கு வசதியில் இல்லை என்றார். மழை பெய்தாலே தங்கள் வீடு ஒழுகும் நிலையில் தான் உள்ளது என்று கூறிய நிவேதா, தான் படிப்பதற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் மாணவி நிவேதா கூறுகையில், ‘அகலமான சாலையில் வீட்டிற்கு வாகனத்தில் போய் இறங்கக் கூடிய வசதி வாய்ப்பில்லை. நினைத்ததை நொடிப்பொழுதில் பதிவிறக்கம் செய்யக் கூடிய இணையதள வசதியில்லை.
நிறைய இல்லைதான். ஆனால் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவராக வேண்டும் என்ற இலக்கு மட்டும் இருக்கு’ என்றார்.
‘மாணவி நிவேதா 10-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு உதவி பெறும் பள்ளியிலும் பயின்றதால் அரசுப்பள்ளி மாணவியருக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவில் இடம் பெறவில்லை. அரசு கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தாலும் கூலித் தொழிலாளர்களான தங்களால் மருத்துவக் கல்வி பயில வைக்கும் அளவிற்கு பொருளாதார சூழல் இல்லாததால் அரசு உதவி செய்ய வேண்டும்’ என நிவேதாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12-ஆம் வகுப்பை முடித்த பிறகு, மலைப்பகுதியில் செயல்படும் உள்ளூர் அரசு சாரா அமைப்பு (NGO) ஒன்றிடமிருந்து வழிகாட்டுதலையும் நீட் தேர்வுக்கான பயிற்சியையும் அவர் பெற்றுள்ளார். தேர்வுக்கான தயாரிப்பின் போது, பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள அவர் தினமும் ஏற்காடு மற்றும் சேலம் இடையே நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.