

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக தமிழக அரசிதழில் (Gazette) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டவிதிகளின்படி ஒருவர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால், ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த வகையில், முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன்னதாகவே, மே 10-ம் தேதியன்று தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை விஜய் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்தே தற்போது அந்த தொகுதி காலியாக இருப்பதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. இதற்கான முறையான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி கிழக்கு தொகுதியை தக்கவைத்துக்கொள்ள தவெக தீவிரமாக உள்ளது. லால்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த கு.ப. கிருஷ்ணனுக்கு இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் கசிகின்றன.
கடந்த தேர்தலில் இழந்த தொகுதியை மீண்டும் கைப்பற்ற திமுக முனைப்பு காட்டி வருகிறது. இதனால் திருச்சி கிழக்கு தொகுதியில் இம்முறை மிக கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் ராஜினாமா செய்த தொகுதி என்பதால், இந்த இடைத்தேர்தல் முடிவு தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படும் என்பதில் ஐயமில்லை.