

தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபா (Rajya Sabha) வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் 2026 ஏப்ரலுடன் முடிவடைகிறது. காலியாகும் இந்த இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16 அன்று நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனுத் தாக்கல் நாளையுடன் (மார்ச் 5) நிறைவடைய உள்ளது.
திமுக சார்பில் திருச்சி சிவா , என் ஆர் இளங்கோ, பி செல்வராஜ் , கனிமொழி ஆகிய நால்வரும் , அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை மற்றும் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜி.கே வாசன் ஆகியோர் தற்போது இந்த பதவியை வகித்து வந்தனர். இதில் திருச்சி சிவாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜ்யசபா தேர்தலுக்கான நாளை வேட்பு மனு தாக்கலுக்கு இறுதி நாள் என்பதால் வேட்பு மனுவில் கையெழுத்திட திமுக எம்எல்ஏக்கள் வருகை தரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. திமுகவிற்கான நான்கு ராஜ்யசபா இடங்களில் ஒன்று தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள மூன்று ராஜ சபா சீட்டுகளுக்கு வேட்பு மனுவை இறுதி செய்யும் பணிகளில் திமுக தீவிரமாக இறங்கியுள்ளது.
திருச்சி சிவா ,கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எம்.எம்.அப்துல்லா மூவருக்கும் வேட்பு மனு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு அறிவாலயத்தில் மூன்று வேட்பு மனுக்கள் தயாராகி வருவதாகவும் இந்த வேட்பு மனுவில் கையெழுத்திட எம்எல்ஏக்கள் வருகை தருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மறுபுறம், காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாததால், அந்தத் தொகுதி காங்கிரஸுக்கு வழங்கப்படுமா என்பதில் இழுபறி நீடிக்கிறது. இன்று இரவுக்குள் காங்கிரஸ் மேலிடம் தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்தால் மட்டுமே ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்று திமுக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் சோடங்கர், "தொகுதிப் பங்கீடு குறித்துச் சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகையிடம் தான் கேட்க வேண்டும்" எனக் கூறி மழுப்பியுள்ளார்.காலியாகும் ஆறு ராஜ்யசபா சீட்டுகளில் நான்கு சீட்டுகளை திமுக கைப்பற்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுத்து விட்டதாக கூறப்படும் நிலையில் மாணிக்கம் தாகூர் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஆனால் தனிநபர்களைவிட கட்சியே பெரிது தலைமை முடிவு செய்யும்போது அதனை ஒழுக்கத்துடன் ஏற்றுக்கொள்வோம். ஏனென்றால் ஒற்றுமையே நம் பலம் என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கூட்டணி நிலை இப்படி இருக்க திமுக ராஜ்யசபா சீட்டுகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.