2025 - அமைதிக்கான நோபல் பரிசு..! உலகமே எதிர்பார்த்தது ட்ரம்ப்... ஆனால் அமைதிப் பரிசை வென்றது யார் தெரியுமா..?

மரியா கோரினா மச்சாடோ பொதுக் கூட்டத்தில்
மரியா கோரினா மச்சாடோ
Published on

இந்த ஆண்டு நோபல் அமைதிப் பரிசை அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெல்வாரா என்று உலக அரசியல் களம் விறுவிறுப்புடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது. உலகத்தின் கவனமும் ஊடக வெளிச்சமும் நார்வேயின் ஓஸ்லோவை நோக்கித் திரும்பியிருந்த அந்த வரலாற்றுத் தருணத்தில்... நோர்வேஜியன் நோபல் குழுவின் அறிவிப்பு, உலகையே ஸ்தம்பிக்கச் செய்தது.

ஒலித்த அந்தப் பெயர்: மரியா கோரினா மச்சாடோ!

'யார் இவர்? எந்தப் பின்புலத்தில் இருந்து வந்தார்? அமைதிக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைக்கக் காரணம் என்ன?' என்ற கேள்விகள் அலை மோதின.

ஏனென்றால், இந்தப் பரிசு சாதாரணமானது அல்ல. அது, இரும்புச் சுவர்களுக்கு நடுவே அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயகத்துக்காகத் துடிக்கும் ஒரு இதயத்திற்கு வழங்கப்படும் மாபெரும் அங்கீகாரம்!

2025 ஆம் ஆண்டுக்கான அமைதிப் பரிசை வென்ற இந்த வெனிசுலாப் பெண்மணியின் கதை, நிழல்களுக்குள் புதைந்திருக்கும் ஒரு வீரமும், தியாகமும் நிறைந்த போராட்டக் காவியம்.

செழிப்பு சிதைந்த கதை: வெனிசுலாவின் சோகம்

ஒரு காலத்தில் செல்வச் செழிப்பிலும் ஜனநாயகத்திலும் சிறந்திருந்த வெனிசுலா, எப்படி ஒரு கொடூரமான சர்வாதிகார ஆட்சியின் கீழ் சிக்கியது? என்பதே இதன் ஆரம்பம்.

எட்டரை கோடி மக்கள் ஆழமான வறுமையில் தள்ளப்பட, உச்சியில் இருந்த ஒரு சிலரே நாட்டைச் சுரண்டி கொழுத்தனர்.

அரசின் பயங்கரவாத இயந்திரம், சொந்தக் குடிமக்களையே வேட்டையாடத் தொடங்கியது.

விளைவு? கிட்டத்தட்ட 80 இலட்சம் மக்கள் நாட்டை விட்டே வெளியேறி, உலக நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர்.

இந்தச் சூழலில்தான், ஒரு காலத்திலும் பிளவுபட்டிருந்த எதிர்க்கட்சிகள் அனைத்தையும் தன் பின்னால் திரட்டி, ஜனநாயகத்தின் இறுதி நம்பிக்கையாக மரியா கோரினா மச்சாடோ எழுந்து நின்றார்.

லத்தீன் அமெரிக்க வரலாற்றில், குடிமக்களின் அசாதாரண தைரியத்துக்கு இவர்தான் சமீபத்திய உதாரணம்.

இதையும் படியுங்கள்:
மாபெரும் கண்டுபிடிப்பு: வேதியியலில் நோபல் பரிசு (2025) வென்ற 'மாயப்பை' வித்தகர்கள்..!!
மரியா கோரினா மச்சாடோ பொதுக் கூட்டத்தில்

குண்டுகளுக்கு எதிராக வாக்குச்சீட்டு: போராட்டத்தின் தீவிரம்

"குண்டுகளை அல்ல; வாக்குச்சீட்டுகளைத் தேர்ந்தெடுப்பதே எங்கள் விருப்பம்!" என்ற முழக்கத்துடன் 20 ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயக இயக்கத்தைத் தொடங்கினார்

மச்சாடோ. 'ஸுமாடே (Súmate)' என்ற அமைப்பை நிறுவி, நீதித்துறை சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரமான தேர்தல்களுக்காக ஓயாமல் குரல் கொடுத்தார்.

ஆனால், சர்வாதிகார ஆட்சி சும்மா இருக்கவில்லை. 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு மச்சாடோவே எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக உருவெடுத்தபோது, அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

'சட்டம், சிறை, சித்திரவதை' என்ற ஆயுதங்களால் அவர் முடக்கப் பார்த்தார்கள். ஆனாலும், மச்சாடோ வீழவில்லை!

உடனே அவர், வேறொரு கட்சியின் பிரதிநிதியான எட்முண்டோ கோன்சலஸ் உருட்டியாவுக்கு (Edmundo Gonzalez Urrutia) தன் முழு ஆதரவையும் அளித்து, தனது போராட்டத்தை வேறு ரூபத்தில் தொடர்ந்தார்.

தேர்தலின் நாடகம்: வெற்றியைத் திருடிய சர்வாதிகாரி

அந்தத் தேர்தல் ஒரு சாதாரண நிகழ்வு அல்ல, அது தைரியம் மிக்க வெனிசுலா மக்களின் அக்னிப் பரீட்சை.

லட்சக்கணக்கான தன்னார்வலர்கள், மச்சாடோவின் வழிகாட்டுதலின் கீழ் திரண்டனர்.

இவர்களின் பணி: அடக்குமுறையாளர்கள் வாக்குகளை அழிக்கவோ, முடிவுகளைப் பற்றிப் பொய் சொல்லவோ முடியாமல், ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் கண் போலக் காப்பது.

குடிமக்களின் இந்த கூட்டு எதிர்ப்பும் அமைதியான முயற்சியும் பலனளித்தது. எதிர்க்கட்சி தெளிவான வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதை சர்வதேச அளவில் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன.

ஆனால், அதிகாரம் கையில் வைத்திருந்தவர்கள், அந்த மக்கள் தீர்ப்பை ஏற்க மறுத்து, அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டனர்.

ஒரு ஜனநாயக வெற்றி, சர்வாதிகாரத்தால் திருடப்பட்ட துயரமான தருணம் அது.

அஞ்சாத அத்தியாயம்: நோபல் பரிசின் பொருள்

மச்சாடோ, அதிகாரத்தின் அத்தனை மிரட்டல்களுக்கும் மத்தியிலும், அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான தனது போராட்டத்தை ஒருபோதும் கைவிடவில்லை.

கடந்த ஒரு வருடமாக உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருந்ததால் அவர் மறைந்து வாழ நேர்ந்த போதும், நாட்டை விட்டு வெளியேற மறுத்த அவரது செயல், மில்லியன் கணக்கான மக்களுக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்தது.

"சுதந்திரத்தை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது; அதை ஒவ்வொரு நாளும் சொற்களாலும், தைரியத்தாலும், உறுதியோடும் காக்க வேண்டும்," என்ற செய்தியை அவர் உலகிற்கு வழங்கினார்.

இதையும் படியுங்கள்:
2025 இயற்பியலுக்கான நோபல் பரிசு: குவாண்டம் வித்தைகள் இப்போது நம் கையில்..!
மரியா கோரினா மச்சாடோ பொதுக் கூட்டத்தில்

அல்ஃபிரட் நோபலின் உயிலில் கூறப்பட்ட அமைதிப் பரிசுக்கான மூன்று முக்கிய அளவுகோல்களையும் மரியா கோரினா மச்சாடோ பூர்த்தி செய்கிறார் என்று நோபல் குழு இறுதியாக அறிவித்தது:

  1. அவர் நாட்டின் எதிர்ப்பை ஒன்றிணைத்தார்.

  2. வெனிசுலாவின் இராணுவமயமாக்கலை (militarisation) எதிர்ப்பதில் ஒருபோதும் அவர் பின்வாங்கவில்லை.

  3. ஜனநாயகத்திற்கு அமைதியான மாற்றம் ஏற்பட அவர் உறுதியான ஆதரவளித்தார்.

மரியா கோரினா மச்சாடோ, ஜனநாயகம் வழங்கும் கருவிகளே நீடித்த அமைதிக்கான கருவிகள் என்பதை நிரூபித்துள்ளார்.

இவர் வென்ற பரிசு, உலகெங்கிலும் இருண்டு வரும் ஜனநாயகத்தின் உச்சியில் ஒளிரும் ஒரு கலங்கரை விளக்கமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com