ஈரானுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக சென்று கொண்டிருப்பதால் ஈரானின் கோரிக்கையை ஏற்று போரை 10 நாட்களுக்கு ஒத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் (Donald Trump)சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக ஈரானில் உள்ள எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதலை மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28 முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலுக்கு பதிலாக ஈரான் தாக்குதல் நடத்தியதால் மோதல் (conflict) துவங்கியது. இந்த போரில் இருபக்கமும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன் எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலக பொருளாதார பாதிப்புகள் போன்ற விளைவுகள் ஏற்பட்டுள்ளன.
தொடர்ந்து நிகழ்ந்த போரால் உலகளாவிய அளவில் பொருளாதார பாதிப்புகள் மற்றும் கட்டிடங்கள் தகர்ப்பு , உயிர் சேதங்கள் போன்றவை நிகழ்ந்து போர் நிறுத்தம் வருமா என மக்கள் எதிர்பார்த்த நிலையில் ஈரான் பேச்சு வார்த்ததைக்கு வருவதை வலியுறுத்தி மார்ச் 23 (2026) அன்று டிரம்ப், ஈரான் மீது திட்டமிட்டிருந்த ஆற்றல் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் (energy & power plants) மீதான தாக்குதலை 5 நாட்கள் சில நிபந்தனைகளுடன் ஒத்திவைத்தார்.
உலக எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கியமான ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz ) கடல் வழியை திறக்க வேண்டும் , அமெரிக்கா மற்றும் கூட்டாளிகள் மீதான தாக்குதல் நிறுத்த வேண்டும் மற்றும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளே அவை. முன்னதாக, 48 மணிநேர கெடுவுக்குள் ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சுமூகமாக செல்வதாலும், எண்ணெய் பாதிப்பு குறையும் வகையில் 10 எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டதாலும் ஈரான் மீதான தாக்குதலை மேலும் 10 நாட்களுக்கு (ஏப்ரல் 6, 2026 வரை) நிறுத்தி வைப்பதாகவும் தற்போது டிரம்ப் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவு மத்திய கிழக்கு பகுதியில் நடக்கும் போர் நிலைமை தற்காலிகமாக குறைய வாய்ப்பு என பார்க்கப்பட்டாலும் அமைதி பேச்சுவார்த்தை (peace talks)நடந்து கொண்டிருப்பதால் மட்டுமே தாக்குதலை April 6 2026 வரை 10 நாட்கள் ஒத்திவைத்ததாக டிரம்ப் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. இது தற்காலிக முடிவு என்பதும் ஈரான் தரப்பிலிருந்தும் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்த வேண்டுகோள் வந்ததால் எடுக்கப்பட்ட தற்காலிக முடிவே இந்த போர்நிறுத்தம் எனத் தகவல்கள் கூறுகின்றன.
ஈரானுடன் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அதிகபட்சம் அளித்திருந்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில் ஈரானின் கோரிக்கையை ஏற்று மேலும் 10 நாட்கள் போர்த் தாக்குதலை நிறுத்தி வைத்திருப்பது போர் முடிவுக்கு வரும் அறிகுறி என்ற எண்ணத்தை தருகிறது. இருப்பினும் 10 நாட்களுக்கு பின் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் போர் முடிவுக்கு வரும் இல்லை எனில் மீண்டும் போர் நிகழும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.