

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' படங்களின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து குறிப்பிடத்தக்கவர்.
இவரது டிராகன் படம் பெரும் வெற்றி பெற்று ரசிகர்கள் இடையே இவருக்கு தனி இடம் தந்தது. மேலும் 'டிராகன்' படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவின் எழுத்து மற்றும் இயக்கத்தைப் பாராட்டி போயஸ் கார்டன் இல்லத்திற்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தார். குறிப்பாக, படத்தின் திரைக்கதை மற்றும் வில்லன் கதாபாத்திரத்தை வெகுவாக ரஜினி பாராட்டியதுடன் மாரிமுத்துவின் எழுத்துத் திறனை "வாட் எ ரைட்டிங்" என புகழ்ந்ததை அஸ்வத் மாரிமுத்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டது பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அஸ்வத் மாரிமுத்து, ரஜினிகாந்துடன் சமீபத்தில் நடந்த உரையாடல் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் . இருவரும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிட்டத்தட்ட உருவானதாகவும், அது எதிர்காலத்தில் நிகழக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளது கோலிவுட்டில் தற்போது பேசும் பொருளாகியுள்ளது.
ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) சார்பில் ரஜினிகாந்திற்காக ஒரு மாதமாக உழைத்து எழுதப்பட்டக் கதையை சூப்பர்ஸ்டாரிடம் நேரில் சுமார் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் விவரித்த போது மிகுந்த ஆர்வத்துடன் ரசித்துக் கேட்டு, "சூப்பர்" என்று பாராட்டியதாக அஸ்வத் தெரிவித்துள்ளார்.
அஸ்வத்தின் மிகவும் மறக்க முடியாத கதை சொல்லல் அமர்வுகளில் ஒன்றாகவும் அந்தத் தருணம் அமைந்தது. இடைவேளையின்போது ரஜினிகாந்த் திகைத்துப்போனதாகவும், முழு கதையையும் கேட்ட பிறகு அதை "அருமை" என்று உற்சாகமாகப் பாராட்டியதையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் இடையே எகிறும் வேளையில் அப்படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்து சில காரணங்களால் அடுத்து இயக்கப்போகும் இயக்குநர் பட்டியலில் அஸ்வத் மாரிமுத்துவும் இடம் பெற்றிருந்தார் எனவும் ஆனால் இறுதியாக சிபி சக்கரவர்த்திக்கு அந்த வாய்ப்பு சென்றிருக்கும் நிலையில் ரஜினியை சந்தித்து கதை சொன்ன அனுபவத்தை பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும ரஜினிகாந்துக்கு ஒரு முக்கியமான சந்திப்பு இருந்தபோதிலும் தன்னைக் காத்திருக்க வைத்ததற்காக மன்னிப்புக் கேட்டதாக ரஜினிகாந்தின் பணிவையும் இயக்குநர்கள் மீதான மரியாதையையும் அஸ்வத் பாராட்டி சிலாகிக்கிறார்.
வளர்ந்து வரும் வெற்றிப்பட இளம் இயக்குநரான அஸ்வத்துக்கு ரஜினியின் இந்த அங்கீகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. "எனது கதை சொல்லல் அவருக்குப் பிடித்திருந்தது என்பதே எனக்குப் பெரிய மகிழ்ச்சி," என்று மகிழும் அஸ்வத், ரஜினிகாந்தை இயக்குவாரா? என்பது குறித்த கூட்டணி அமைக்கும் பணி இன்னும் பரிசீலனையில் உள்ளதால் பொறுத்திருந்து பார்ப்போம்.
அதேபோல் 75 வயதிலும் தீராத தேடலுடனும் ஆர்வத்தோடும் திரையில் பணியாற்றும் ரஜினிகாந்தின் கவனம் இப்போது இளம் இயக்குநர்களை நோக்கித் திரும்பியிருக்கிறது. சினிமாவில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால் இளம் திறமையாளர்களை நம்ப வேண்டும் என்கிற மனநிலையுடன் அஸ்வத் போன்றோரை அழைத்து பாராட்டி ஊக்கப்படுத்துவது திரையுலகினரை ஆச்சரியப்படுத்துகிறது.