
அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு நீங்கள் அதிக வரி விதித்தால் நாங்களும் அதை செய்வோம் என இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று மீண்டும் 2-வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டிரம்ப், வருகிற ஜனவரி 20-ம் தேதி அமெரிக்கா அதிபராக பதவியேற்கவுள்ளார். அதிபராக பதவியேற்ற பின்னர் என்னென்ன மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் செய்யப்படும் என்று தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து ஒவ்வொரு நாளும் டொனால்ட் டிரம்ப் அறிவித்து கொண்டே வருகிறார்.
பல ஆண்டுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா சிறந்த வர்த்தக கூட்டாளிகளாக இருந்து வருகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
அதே சமயம் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி வகித்த காலத்தில் இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தில் சிக்கல் நீடித்தது. அதற்கு காரணம் அமெரிக்காவின் சில பொருட்களுக்கு இந்தியா அதிகளவில் வரி விதிப்பதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டினார்.
அதுமட்டுமின்றி அதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு அதிக வரியை விதித்தார். இது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.
பின்னர் 2020 ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்து, ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவு மீண்டும் சீரானது.
இந்த சூழலில் அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் அமோக வெற்றி பெற்ற பிறகு தங்களின் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதித்தால் அவர்களுக்கு நாங்களும் அதையே செய்வோம் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
பாதுகாப்புவாத நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற இந்தியா, அமெரிக்க இறக்குமதிகள் மீது அதிக வரி விதிப்பதற்காக அடிக்கடி விமர்சனங்களை எதிர்கொள்கிறது. தனது சமீபத்திய கருத்துக்களில், டிரம்ப் குறிப்பாக இந்தியாவையும் பிரேசிலையும் அதிகப்படியான கட்டணங்களைக் கொண்ட நாடுகளாகக் குறிப்பிட்டு, அமெரிக்காவின் சில பொருட்களுக்கு அதிக அளவு வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும், பிரேசிலும் முதன்மையான இடத்தில் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏறக்குறைய எல்லா சந்தர்ப்பங்களிலும், அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கிறார்கள். ஆனால், நாங்கள் அவர்களுக்கு வரி விதிக்கவில்லை. எனவே இங்கு ‘பரஸ்பரம்' என்ற வார்த்தை முக்கியமானதாக உள்ளது. அதாவது, இந்தியா, பிரேசில் எங்களுக்கு அதிக வரி விதித்தால் நாங்களும் அதே அளவு வரி விதிப்போம் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"இந்தியா எங்களுக்கு ஒரு சைக்கிளை ஏற்றுமதி செய்கிறது என்றால், அதேபோல அவர்களுக்கும் நாங்கள் ஒரு சைக்கிளை ஏற்றுமதி செய்கிறோம். அப்படியெனில் வரிவிதிப்பு விகிதமும் ஒன்றாகதானே இருக்க முடியும். ஆனால் அவர்கள் 100 முதல் 200 சதவீதம் வரை வரி விதிக்கிறார்கள். அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்க விரும்பினால், அது பரவாயில்லை; ஆனால் நாங்கள் அவர்களிடம் அதே கட்டணத்தை வசூலிக்கப் போகிறோம்," என்று டிரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்பின் புதிய அரசில் வர்த்தக மந்திரியாக பதவியேற்க இருக்கும் ஹோவர்ட் லுட்னிக்கும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். “நீங்கள் எங்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை வைத்துதான், நீங்கள் எப்படி நடத்தப்படுவீர்கள் என்பது இருக்கும்” என கூறினார்.