ஆந்திர மாநிலத்தில் திருமலை மலை மீது அமைந்துள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் கலியுக வைகுண்டம் என்று போற்றப்படும் உலகப் பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலமாகும். குறிப்பாக இந்தியாவில் பணக்கார கோவில் என்ற பெருமையும் இந்த கோவிலுக்கு உண்டு. கட்டுக்கடங்காத கூட்டங்களோடு, ஏராளமான சர்ச்சைகள் சூழ்ந்தாலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்றுவரை எள்ளளவும் குறைந்தபாடில்லை.
ஏழு மலைகளின் உச்சியில் வீற்றிருக்கும் பாலாஜியை தரிசனம் செய்ய தென்மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் 24 மணிநேரம் கூட காத்திருந்து பெருமாளை தரிசிக்கும் நிலையில் உள்ளனர். இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 20 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க குடும்பத்துடன் வருபவர்களுக்கு மட்டுமே அறைகள் ஒதுக்கீடு என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்து.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வசதியை உறுதி செய்யும் வகையில், குறிப்பாக தற்போது நடந்து வரும் கோடை விடுமுறையில் தங்கும் வசதி, ஓய்வு அறைகள், உடைமைகள் வைப்பறை சேவைகள், குளியல் அறை வசதிகள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் என பரந்த அளவிலான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.
திருமலையில் மொத்தம் 7800 தங்கும் அறைகளே தற்போது பயன்பாட்டில் உள்ளன. பக்தகர்கள் தங்கி ஓய்வெடுக்க இடப்பற்றாக்குறை உள்ளது. அதன் விளைவாக, தங்கள் குடும்பத்துடன் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அறை ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தனி நபருக்கோ அல்லது திருமணம் ஆகாத ஜோடிகளுக்கோ அறைகள் வழங்கப்பட மாட்டாது.
தங்கும் அறைகளை பெற இயலாத பக்தர்களின் நலன் கருதி, திருமலையில் 5 பிரத்யேக பக்தர்களுக்கான வசதி வளாகங்களை (அமைனிட்டி காம்ப்ளக்ஸ்) தேவஸ்தானம் அமைத்துள்ளது. இந்த மையங்களில் பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டை, தொலைப்பேசி எண்ணை பதிவு செய்து, இலவச உடைமைகள் வைப்பறை வசதி மற்றும் பிற அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.