

தமிழக முதல்வர் விஜய் தலைமையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஜூலை 1) மாலை 4 மணிக்கு தொடங்கி கிட்டத்தட்ட 1 மணி நேரம் நடைபெற்றது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து தமிழக அரசியல் களம் மிகப்பெரிய வரலாற்று மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக தமிழகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவை ஓரம்கட்டி தவெக புதிய ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.
ஆட்சி அமைக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் இல்லாததால் விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் முதல் ஆளாக கூட்டணியில் இருந்து விலகி விஜய்க்கு ஆதரவு கொடுத்தது. அதனை தொடர்ந்து விசிக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது.
சமீபத்தில் மதிமுகவும் திமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. இந்த அரசியல் அதிரடிகளுக்கு மத்தியில், ஒருபுறம் திமுகவிலிருந்து கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக விலகி வருகின்றன; மறுபுறம், அதிமுகவில் தேர்தல் தோல்விக்குப் பிறகு கடுமையான உள்கட்சிப் பூசல் வெடித்துள்ளதால் அக்கட்சி பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தந்த தோழமை கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிக்கவும் தமிழக முதல்வர் விஜய் தலைமையில், தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது.
அரசியல் சூழலைப் பயன்படுத்தி தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து, வலுவான கூட்டணியாக ஒன்றாக நிற்பதற்கான திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலை கூட்டணி பலத்தோடு எதிர்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சுமார் ஒருமணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் விசிக தலைவர் திருமாவளவன், ஐயூஎம்எல் தலைவர் காதல் மொகிதீன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் இடதுசாரி கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கூட்டம் நிறைவடைந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய தவெக அமைச்சர் நிர்மல் குமார், ‘தவெக கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி, இதையே அனைத்து கட்சிகளும் விரும்புவதாக தெரிவித்தார். தவெக தலைமையில் புதிய கூட்டணி அமைந்து விட்டது. விரைவில் தவெக கூட்டணி பெயர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இது கருத்து வேறுபாடு இல்லாத ஒரு கூட்டணி என்றும், தவெக கூட்டணி பெயரை அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து முதலமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.
அதனை தொடர்ந்து பேசிய பேட்டியளித்த மதிமுக முதன்மை செயலர் துரை வைகோ, ஊழலற்ற ஆட்சி தரும் தவெகவுக்கு ஆதரவு அளிப்போம். பிரிவினைவாத, பண அரசியலுக்கு முதலமைச்சர் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்று கூறினார்.